| ADDED : ஜூன் 20, 2024 08:34 PM
திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சி நுழைவாயிலில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.திண்டிவனம் நகராட்சி 33வது வார்டு, ஜி.என்.எம்.நகரில் 50க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், தெரு மின்விளக்கு மற்றும் சாலை வசதி செய்து தரக்கோரி, கடந்த மாதம் நகராட்சி ஆணையாளரிடம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், நேற்று மாலை 4:30 மணியளவில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வட்ட தலைவர் பார்த்திபன், வட்ட செயலாளர் சதீஷ்குமார், மா.கம்யூ., முனியாண்டி உள்ளிட்டவர்கள், நகராட்சி பொறியாளர் பவுல்செல்வத்திடம், கோரிக்கை குறித்து பேசினர். இதற்கு நகராட்சி தரப்பில் நகராட்சி பகுதியில் மின்கம்பம் அமைப்பதற்காக 30 லட்சம் ரூபாய் மின்வாரியத்தில் கட்டப்பட்டுள்ளது. மின் கம்பம் வந்தவுடன் தெரு மின்விளக்கு அமைத்து தரப்படும் என தெரிவித்தனர்.இதனை ஏற்க மறுத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தகராறு செய்தனர். இதனால், அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், நகராட்சி அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த 5:30 மணியளவில் வந்த திண்டிவனம் டவுன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததைத் தொடர்ந்து 6:00 மணியளவில் தர்ணா போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.