விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட விவசாயிகள், அதிக விலையுடைய டி.ஏ.பி., உரத்துக்கு பதிலாக, கரும்பு, வேர்க்கடலை, எள், தென்னை, தோட்டக்கலைப் பயிர்களின் மகசூல் அதிகரிக்க சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் உரத்தினை பயன்படுத்த வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) சீனிவாசன் செய்திக்குறிப்பு:சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் உரத்தில் 16 சதவீதம் மணிச்சத்து மற்றும் சல்பர், கால்சியம் போன்ற நுண்ணுாட்ட உரங்கள் சிறிதளவு உள்ளன. சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டு எளிதில் கிடைக்கின்றன.சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் உரத்தின் மூலம் பயிர்களுக்கு, கால்சியம் மற்றும் சல்பர் சத்து கூடுதலாக கிடைக்கிறது. மேலும், நீரில் கரையும் மணிச்சத்து கிடைப்பதால், பயிரின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.நிலக்கடலை மற்றும் எள் போன்ற எண்ணெய் வித்துப் பயிர்களுக்கு, சல்பர் அதிகம் தேவைப்படுவதால், சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் பயன்படுத்துவதன் மூலம் அதிக எண்ணெய் சத்துடன் எண்ணெய் வித்து பயிர்களின் மகசூல் அதிகரிக்கும்எனவே, விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள கரும்பு, எண்ணெய்வித்துப் பயிர்களான வேர்க்கடலை, எள் மற்றும் தென்னை, தோட்டக்கலைப் பயிர்களுக்கு தேவைப்படும் சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் உரத்தினை வாங்கிய பயன்பெறக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.விவசாயிகள் சாகுபடிக்கு முன்னதாக ஒரு ஏக்கருக்கு 300 கிலோ கிராம் மக்கிய தொழு உரத்துடன், பரிந்துரைக்கப்பட்ட சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் உரத்தினை கலந்து 30 நாட்கள் வைத்திருக்க வேண்டும். பின், அதனை அடியுரமாக பயிர் சாகுபடிக்கு முன் இடுவதால் மணிச்சத்தின் பயன்பாடு அதிகரிக்கிறது.மேலும், பயிர்கள் வறட்சியை தாங்கி வளரும் தன்மையை பெறுகிறது. விவசாயிகள் பாஸ்போ பாக்டீரியா என்னும் உயிர் உரத்தை பயன்படுத்துவதன் மூலம், மண்ணில் கிடைக்காத நிலையில் உள்ள மணிச்சத்தினை கரைத்து பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.இதற்காக, மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் யூரியா 9,230 டன், டி.ஏ.பி., 1,624 டன், பொட்டாஷ் 1,064 டன், காம்ப்ளக்ஸ் 9,564 டன், சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் 1,537 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் டி.ஏ.பி. உரத்திற்கு பதில், விலை குறைவான சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் உரத்தினைப் பயன்படுத்தலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.