திண்டிவனம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலை மையப்படுத்தி முன்னாள் அமைச்சர் சண்முகம் பெயரில் சமூக வலைதளத்தில் அவதுாறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் 10ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலை புறக்கணித்துள்ள அ.தி.மு.க.,வின் ஆதரவை பா.ம.க.,வும், நாம் தமிழர் கட்சியும் வெளிப்படையாக கேட்டு வந்தாலும், அ.திமு.க., எந்த கட்சிக்கும் ஆதரவு தரவில்லை. ஆனால் பா.ம.க.,வினர் தேர்தல் பிரசார பேனர்களில் ஜெ.,வின் படத்தை போட்டு விளம்பரப் படுத்தி வருகின்றனர்.இந்த சூழலில், சமூக வலைதளத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் படத்தை போட்டு, 'புரட்சித்தலைவி அம்மாவின் பெயரையோ, போட்டோவையோ பயன்படுத்த பா.ம.க.,விற்கு எந்த யோக்கியதையும் கிடையாது. பா.ஜ.,வோடு கூட்டு சேர்ந்து அ.தி.மு.க.,வை அழிக்க நினைத்த பா.ம.க.,விற்கு அ.தி.மு.க., தொண்டன் ஒருபோதும் ஓட்டு போட மாட்டான்' என்ற வாசகம் அடங்கிய செய்தி வைரலாக பரவியது.இது குறித்து, முன்னாள் அமைச்சர் சண்முகத்தின் உதவியாளர் ராஜாராம், நேற்று இரவு திண்டிவனம் ரோஷணை போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், சமூக வலைதளத்தில் சண்முகம் குறித்து அவதுாறாக கருத்து பரப்பி வருகின்றனர். தவறான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.முன்னாள் அமைச்சர் சண்முகம் டில்லியில் உள்ளதால், அவர் கூறியதன் பேரில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டதாக உதவியாளர் தெரிவித்தார்.