| ADDED : ஜூலை 25, 2024 05:18 AM
விழுப்புரம்: பார்சல் சாப்பாட்டில் ஊறுகாய் வைக்காத ஓட்டல் உரிமையாளருக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.விழுப்புரம், வழுதரெட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநல சங்க மாநில தலைவர். இவர் தனது உறவினரின் 2ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி 25 பேருக்கு அன்னதானம் வழங்குவதற்காக கடந்த 2022ம் ஆண்டு நவ., 28ம் தேதி விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகேவுள்ள ஓட்டலில் ரூ.2,000 செலுத்தி 25 பார்சல் சாப்பாடு வாங்கினார். அதற்கான ரசீதை தர மறுத்த ஓட்டல் உரிமையாளர் துண்டு சீட்டில் எழுதி கொடுத்தார்.வீட்டிற்கு சென்ற ஆரோக்கியசாமி, உணவு பொட்டலங்களை முதியோர்களுக்கு வழங்கியபோது ஊறுகாய் இல்லை. ஓட்டல் உரிமையாளரிடம் கேட்டதும், அவர் ஊழியர்களை விசாரித்தார். அதில், ஊறுகாய் வைக்காதது உறுதியானது. ஆனால், அதற்கான தொகை ரூ.25யை தர மறுத்துவிட்டார்.இதுகுறித்து ஆரோக்கியசாமி விழுப்புரம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த குறைதீர் ஆணைய தலைவர் சதீஷ்குமார், உறுப்பினர்கள் மீராமொய்தீன், அமலா ஆகியோர், பார்சல் உணவில் ஊறுகாய் வைக்காததால் ஆரோக்கியசாமிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ.30 ஆயிரம், வழக்கு செலவிற்கு ரூ.5 ஆயிரம், ஊறுகாய் பொட்டலம் 25க்குரிய தொகை ரூ.25 மற்றும் தொகைக்கான அசல் ரசீதை தீர்ப்பு வழங்கிய 45 நாளில் ஓட்டல் உரிமையாளர் வழங்க உத்தரவிட்டனர்.