விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்ததையொட்டி, மின் நுகர்வோர்களின் தேவைக்கு ஏற்ற வகையில் கூடுதல் மின் சப்ளை வழங்கியும் கிராமப்புறங்களில் குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதாக மக்கள் புலம்புகின்றனர். சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் குறைந்த மின்தேவையுள்ள பகுதிகளில் 22 கிலோ வாட் டிரான்ஸ்பார்மர் மூலமும், அதிக மின்தேவையுள்ள தொழில் சார்ந்த நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு 110 கிலோ வாட் டிரான்ஸ்பார்மர்கள் மூலம் மின்சப்ளை செய்யப்படுகிறது.கோடை காலத்தில் மட்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் போது, மின் உற்பத்தி பெரும்பாலும் குறைவாகவே இருக்கும். இந்த நேரத்தில் மின் சப்ளை மற்றும் வோல்டேஜ் பிரச்னை ஏற்படாமலிருக்க சுழற்சி முறையில் மக்களுக்கு பாதிப்பின்றி மின்சப்ளை வழங்கப்பட்டு வருகிறது.மாவட்டத்தில் கடந்த 2021-22ம் ஆண்டில், விழுப்புரம் மின்பகிர்மான வட்டம் அலுவலகம் கட்டுப்பாட்டில், மின் நுகர்வோர்கள் 4 லட்சத்து 51 ஆயிரத்து 672 பேரின் வீடுகளுக்கு மின் சப்ளை வழங்கப்பட்டது.வணிகம் சார்ந்து 64 ஆயிரத்து 630, தொழிற்சாலை சம்பந்தமாக 3,600, விவசாயம் சார்ந்து 1 லட்சத்து 5 ஆயிரத்து 222 பேருக்கு மின் சப்ளை விநியோகம் செய்யப்பட்டது.இதையடுத்து, 2022-23ம் ஆண்டில் 4 லட்சத்து 60 ஆயிரத்து 114 நுகர்வோருக்கும், 67 ஆயிரத்து 803 வணிக நிறுவனங்களுக்கும், 3,713 தொழிற்சாலைகளுக்கும், ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 610 விவசாய மின் இணைப்பிற்கும் மின்சாரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.இந்தாண்டான 2023-24ல், 4 லட்சத்து 70 ஆயிரத்து 722 நுகர்வோர்களுக்கும், 70 ஆயிரத்து 3 வணிக நிறுவனங்களுக்கும், 3,769 தொழிற்சாலைகளுக்கும், ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 141 விவசாய மின் இணைப்புகளுக்கும் மின் சப்ளை விநியோகம் செய்யப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் அனைத்து தரப்பு மக்களுக்கான கணிசமான மின் தேவைகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதற்கு தகுந்தாற் போல் மின்வாரிய அதிகாரிகள், மின் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.தற்போது, கோடை வெயிலின் தாக்கத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் குறைந்த மின்னழுத்த பிரச்னை உள்ளதாக புகார் எழுந்துள்ளது.இந்த பிரச்னையை மின்வாரிய அதிகாரிகள் நகர பகுதிகளில் தீர்த்தாலும், கிராமப் புறங்களில் தீர்க்க முடியாமல் உள்ளனர்.இதனால், கிராம மக்கள் குறைந்த மின்னழுத்த பிரச்னையால் மின்சாதன பொருட்கள் பழுதாகி, அதை சரி செய்வதில் தங்களின் பணத்தை ஒருபுறத்திலும், மறுபுறத்தில் மின் கட்டணத்திற்கு செலவு செய்தும் பணத்தை இழப்பதாக புலம்புகின்றனர்.இது குறித்து, மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், 'விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு எவ்வித குறைபாடின்றியும் மின்சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வெயிலின் தாக்கத்தில் மக்கள் மின்சாரம் இல்லாமல் சிரமப்படாமல் இருக்கவும், சீரான மின்சார சப்ளை வழங்கவும், டிரான்ஸ்பார்மர் மூலம் தேவையான கூடுதல் மின்திறன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்காக, மின் ஊழியர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிரமாக பணிபுரிகின்றனர். எங்களுக்கு குறைந்த மின்னழுத்தம் குறித்து புகார் வந்தால் அங்கு ஊழியர்கள் மூலம் உடனடியாக சரி செய்யப்படுகிறது.குறைகள் உள்ள கிராமங்களில் சீரான மின் விநியோகம் வழங்க துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.