| ADDED : ஜூலை 25, 2024 11:30 PM
வானுார்: பழங்குடியின மக்களுக்கு இ-பட்டா வழங்கக்கோரி, கலெக்டர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரிடம் , தி.மு.க., பிரமுகர் கோரிக்கை மனு அளித்தனர்.இது குறித்து ஒழிந்தியாம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த தி.மு.க., நிர்வாகி சக்திவேல், கலெக்டர் பழனி மற்றும் டி.ஆர்.ஓ., பரமேஸ்வரியிடம் அளித்துள்ள மனு:வானுார் ஒன்றியத்திற்குட்பட்ட ஒழிந்தியாப்பட்டு கிராமத்தில் கடந்த 1990ம் ஆண்டு வீடு இல்லாத 43 இருளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு திண்டிவனம் ஆதிதிராவிட நலத்துறை மூலம் பட்டா கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது.இதையெடுத்து, ஒவ்வொரு நபருக்கும் தலா 2.5 சென்ட் வீட்டு மனை ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இன்று வரை கிராம வருவாய் கணக்கில், இந்த நபர்களின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை.மேலும் ஒழிந்தியாம்பட்டு கிராம நிர்வாக அலுவலர், கிளியனுார் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் தங்களது அறிக்கையை வானுார் வருவாய் தாசில்தாரிடம் சமர்ப்பித்துள்ளனர். மனை ஒதுக்கீடு செய்த நபர்களுக்கு, வருவாய் கணக்கில் திருத்தி இதுவரை இ-பட்டா வழங்கவில்லை.இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர்களும், கிராம முக்கியஸ்தர்களும் தாலுகா அலுவலகத்தில் பலமுறை மனுக்கள் கொடுத்துள்ளோம். இதுவரை அவர்களுக்கு தனிப்பட்டா வழங்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தாங்கள் தலையிட்டு, வீட்டுமனை ஒதுக்கீடு பெற்ற தனிபட்டா வழங்கியதற்கு இ-பட்டா வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.