| ADDED : ஜூலை 27, 2024 05:04 AM
திண்டிவனம்: ''மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது'' என்று பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் கூறினார். இதுகுறித்து அவர் நேற்று காலை தைலாபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 3 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் மின்சார ஒழுங்கு முறை ஆணையம் நஷ்டத்தைத்தான் சொல்கிறது. மின் கட்டண உயர்வால் ரூ 18,400 கோடி கூடுதல் வாருவாய் கிடைத்தும், ரூ 10 ஆயிரம் கோடியாக நஷ்டம் அதிகரித்துள்ளது. கடந்த 22ம் ஆண்டு ரூ 36,500 கோடியும், 23ம் ஆண்டு வணிக நிறுவனங்கள் மூலம் 34 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்தும், 3420 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மின்சார ஒழுங்கு முறை ஆணையம் கூறியுள்ளது. இதன் மூலம் மின்துறையில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்பது தெரியவருகிறது. ஒவ்வொரு முறையும் மின்கட்டணமாக ரூ 2400 கோடி கூடுதல் வருவாய் கிடைப்பதாக அரசு கூறுகிறது. கட்டண உயர்வுக்கு பின்னும் நஷ்டத்தில் உள்ளது என்று கூறிவருவதால், இது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவோம் என்று முதலில் கூறிவிட்டு, தற்போது வழங்க முடியாது என்று முதல்வர் கூறி வருகிறார் .போராட்டம் குறித்து முடிவு செய்வதற்கு, பா.ம.க.,மற்றும் வன்னியர் சங்கத்தின் கூட்டு பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடக்க உள்ளது. அதில் போராட்ட வடிவம்,தேதி குறித்த அறிவிப்ப முறைப்படி அறிவிக்கப்படும். திண்டிவனம்- நகரி ரயில்பாதை பணிகளுக்கு கணிசமான நிதி உதவி ஒதுக்கப்பட்டுள்ளது. திண்டிவனம்--- திருவண்ணாமலை ரயில் பாதைக்கு 696 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி கொடுக்காததால், திட்டம் நிறைவேறுவதில் காலதாமதம் ஏற்படுகின்றது. அரசு விரைவில் நிலத்தை கையப்படுத்தி கொடுக்க வேண்டும். மாமல்லபுரம்-புதுச்சேரி-கடலுார் கிழக்கு கடற்கரை பாதை திட்டத்திற்கு ரூ 205 கோடி ஒதுக்கி இருப்பது போதுமானதல்ல. ஆண்டிற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும். காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் மேட்டூர் அணை நீர்மட்டம் 92 அடியை கடந்துவிட்டது. குறுவை சாகுபடி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடவேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவது குறித்து அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மணல்கொள்ளை குறித்து தகவல் தரும் பொதுமக்கள் மிரட்டப்படுகின்றனர். கரும்பு சாகுபடி படிப்படியாக குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் தமிழக சர்க்கரை ஆலைகள் மூடவேண்டிய நிலை ஏற்படும். இதை தடுக்க கரும்பு கொள்முதல் விலையை உயர்த்த மத்திய, மாநில அரசுகள் உயர்த்தி தருவதறத்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.பள்ளி மேலாண்மை குழுக்களில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு போதுமான பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை. கடந்த 2019 அரசு ஆணைப்படி முறையான பிரதிநிதித்துவம் வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுத்துறையில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத தற்காலிகப்பணிகளுக்கு ரூ 20 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். அமைப்புச்சாரா தினக்கூலி தொழிலாளர்களுக்கு தினமும் ரூ 600 வழங்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், தற்காலிக ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ 200 வழங்குவது தொழிலாளர் விரோத போக்காகும். மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது. தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் அதிக கட்டணம் வாங்கியும், பணியாற்றும் ஆசிரியர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்குவதும் ஒரு வகை சுரண்டலே. இவ்வாறு ராமதாஸ் கூறினார்.