| ADDED : ஜூன் 19, 2024 11:08 PM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே அரசு பள்ளியின் இரும்பு கதவு மாணவி மீது விழுந்து காயமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் அருகே பில்லுார் கிராமத்தில் ஆதிதிராவிடர் நல அரசினர் தொடக்க பள்ளி அமைந்துள்ளது. பள்ளியில் உள்ள இரும்பு கேட் மீது ஏறி 3ம் வகுப்பு மாணவி ஒருவர், நேற்று காலை 8.45 மணிக்கு விளையாடி கொண்டிருந்தார். அப்போது இடதுபுற இரும்பு கதவு திடீரென பெயர்ந்து,மாணவியின் தலை மீது விழுந்தது.மாணவியின் அலறல் சத்தத்தை கேட்ட, அங்கிருந்த துப்புரவு பணியாளர் ஒருவர், அவரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். தகவலறிந்த மாணவியின் பெற்றோர் மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆதிதிராவிடர் நலப்பள்ளி உதவி கல்வி அலுவலர் கலிவரதன், பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார். பின், அவர், கூறியதாவது; சிகிச்சையில் உள்ள மாணவி நலமாக உள்ளார். பள்ளியில் விழுந்த இரும்பு கேட் அகற்றப்பட்டு, தற்காலிக பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவாக புதிய கேட் மாற்றப்படும்' என்றார்.