உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மல்லர் கம்ப வீரர்களின் உலக சாதனை நிகழ்ச்சி விழுப்புரத்தில் 21ம் தேதி நடக்கிறது

மல்லர் கம்ப வீரர்களின் உலக சாதனை நிகழ்ச்சி விழுப்புரத்தில் 21ம் தேதி நடக்கிறது

விழுப்புரம் : விழுப்புரத்தில் வரும் 21ம் தேதி 100 மல்லர் கம்பங்களில், 1000 மல்லர்கம்ப வீரர்கள் சாகசம் நிகழ்த்தும் உலக சாதனை நிகழ்ச்சி நடக்கிறது.தமிழ்நாடு மல்லர் கம்ப கழக பொதுச்செயலாளர் துரைசெந்தில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான, மல்லர் கம்பம் விளையாட்டை நிறுவிய தலைவர் உலக துரையின் 85-ம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, விழுப்புரத்தில் 100 மல்லர் கம்பங்களை நட்டு, ஒரே நேரத்தில் ஆயிரம் மல்லர் கம்ப வீரர்கள் சாகசம் செய்யக்கூடிய உலக சாதனை நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சி திடலில் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.உலக சாதனை நிகழ்வை உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு மல்லர் கம்பம் கழக புரவலர் டாக்டர் கவுதமசிகாமணி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணை மேலாளர் சுஜாதா, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க இணை செயலாளர் பாலாஜி மற்றும் விளையாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள், பொது மக்கள் பலர் கலந்துகொள்கின்றனர்.இந்நிகழ்வில், தமிழகத்தின் 18 மாவட்டங்களைச் சேர்ந்த 3 வயது முதல் 21 வயது வரை உள்ள ஆண், பெண் மல்லர் கம்ப வீரர்கள் 1,000 பேர் கலந்துகொண்டு, ஒரே நேரத்தில், ஒரு மல்லர் கம்பத்தில் 10 பேர் வீதம், 100 கம்பங்களில் உலக சாதனை செய்ய உள்ளனர். இந்நிகழ்வின் போது 15 நிமிடங்களில், குழுவாக 6 பிரமிடுகளும், தனி நபராகவும் மல்லர் கம்பத்தில் ஏறி சாகசம் செய்ய உள்ளனர்.இந்நிகழ்வில் பங்குபெறும் அனைவருக்கும், உலக சாதனையாளர் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படுகிறது. உலகளவில் 100 மல்லர் கம்பம் வைத்து, 1,000 வீரர்கள் சாகசம் செய்வது இதுவே முதல்முறையாகும் என்றார்.தமிழ்நாடு மல்லர் கம்பர் கழக தலைவர் ஜனார்த்தனன், உலக சாதனை நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மல்லர் கம்ப பயிற்சியாளர் ஆதித்யன், பொருளாளர் செந்தமிழ் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை