| ADDED : ஜூன் 04, 2024 05:37 AM
விழுப்புரம், விழுப்புரத்தில் வரும் 21ம் தேதி திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கான குறைகேட்பு முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு முகாம் நடக்கிறது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குறைகேட்பு கூட்ட அரங்கில், வரும் 21ம் தேதி அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு மாவட்ட அளவில் குறைகேட்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.இந்த சிறப்பு முகாமில், திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு, திருநங்கைகள் நல வாரியத்தின் அடையாள அட்டை பெறுதற்கு பதிவு செய்தல். ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை மற்றும் ஆயஷ்மான் பாரத் அட்டை ஆகியவைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மேலும், பழைய திருநங்கை நல வாரிய அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் இணையதள அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் தங்களின் விபரத்தை https://tg.tnsw.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.