| ADDED : மே 03, 2024 02:41 AM
திருக்கோவிலுார்,:விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் சைலோமை சேர்ந்த தமிழ்செல்வன் மனைவி ஜாக்குலின் மேரி, 37; தனியார் பள்ளி ஆசிரியை. இவர் நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.திருக்கோவிலுார் நான்கு முனை சந்திப்பு அருகே பைக்கில் வந்த இருவர் ஜாக்லின் மேரி தாலி செயினை பறித்து சென்றனர். டி.எஸ்.பி., மனோஜ்குமார் தலைமையில் தனிப்படை போலீசார் கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்து வாகன சோதனையை தீவிரப்படுத்தினர்.இரவு, 7:00 மணி அளவில் திருக்கோவிலுார் ---- விழுப்புரம் சாலையில், காணை அருகே சாலை ஓரம் சந்தேகிக்கும் வகையில் பைக் நின்ற பகுதியில் விடிய விடிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை, 4:15 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், சோழகனுார் பாஸ்கரன் கரும்பு தோட்டத்தில் பதுங்கியிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.அதில், அவர்கள், கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த எஸ்.புதுாரை சேர்ந்த அருள்ஜோதி, 23, விழுப்புரம் மாவட்டம், வானுாரை சேர்ந்த அபிமன்யு, 23, என்பதும், செயின் பறித்ததும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் தாலி செயின், பைக்கை பறிமுதல் செய்தனர்.