உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புதுச்சேரியில் விபச்சார வழக்கில் மனைவி கைது: இரு மகளை கடலில் வீசி கொலை செய்த தந்தை கைது

புதுச்சேரியில் விபச்சார வழக்கில் மனைவி கைது: இரு மகளை கடலில் வீசி கொலை செய்த தந்தை கைது

மரக்காணம்: புதுச்சேரியில் மனைவி விபச்சார வழக்கில் கைதானதால், கணவன் அவமானம் தாங்காமல் இரண்டு பெண் குழந்தைகளை கடலில் வீசிவிட்டு தலைமறைவாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், அடுத்த கூனிமேடு மீனவர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தவேலு,33; இவர் காலப்பாட்டை சேர்ந்த கீர்த்தி என்ற கவுசல்யா,26; என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜோவிதா,4; சுஸ்மிதா,1 என்ற இரு மகள் உள்ளனர். ஆனந்தவேலு தற்பொழுது புதுச்சேரி மாநிலம், காலாப்பட்டு பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். ஆனந்தவேலுக்கும் அவரது மனைவிக்கும் கடந்த சில மாதங்களாக அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்பொழுது ஆனந்தவேலு தனது செந்த ஊரான கூனிமேட்டிற்கு வந்து சில நாட்கள் அங்கேயே தங்கிவிட்டு அதன் பின் காலப்பட்டிற்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த 10ம் தேதி இரவு புதுச்சேரி மாநிலம், பெரியகடை காவல் நிலையத்திலிருந்து வந்த போனில், '' ரெயின்போ நகரில் ஒரு வீட்டில் அமுதா என்ற ரத்தினாம்பாள்,58; என்பவர் வீடு வாடகை எடுத்து அதில் 4 பெண்களை வைத்து விபசார தொழில் நடத்தியதாகவும். அதற்கு ஆனந்தவேலுவின் மனைவி(கீர்த்தி) உடந்தையாக செயல்பட்டு வந்தார் என்றும், இதற்காக கைது செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அவமானம் தாங்காமல் அன்றையதினம் இரவு, ஆனந்தவேலு தனது குழந்தைகளான ஜோவிதா, சுஸ்மிதா ஆகியோரை அழைத்துக் கொண்டு கூனிமேடு மீனவ கிராமத்தில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் அடுத்த நாள் (11ம் தேதி) மதியம் தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வெளியே செல்வதாக உறவினர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் ஆனந்தவேலு நள்ளிரவு 12.30 மணிக்கு அவரது தந்தை ஆறுமுகத்திற்கு போன் செய்து அவமானம் தாங்கமுடியவில்லை என்பதால், தனது குழந்தைகளுடன் கடலில் குதித்து தற்கொலை செய்த கொள்ளப்போகிறேன் என்று கூறிவிட்டு போனை கட் செய்துவிட்டார். இதை தொடர்ந்து ஆறுமுகம் கூனிமேடு, காலாப்பட்டு கடற்கரை பகுதியில் தேடிப்பார்த்தும் யாரும் கிடைக்கவில்லை. இந்நிலையில் காலை 5.30 மணிக்கு கூனிமேடு கடற்கரையில் சுஸ்மிதாவின் உடல் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. அதேபோல் அனுமந்தைகுப்பம் கடற்கரையில் ஜோவிதா வின் உடல் கரை ஒதுங்கியது. இது குறித்து கூனிமேடு கிராமநிர்வாக அலுவலர் அப்துால் ரகுமான் கொடுத்த தகவலின் பேரில் மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுஇரண்டு சிறுமிகளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.யார் வழக்கு பதிவு செய்வது எல்லை பிரச்சனையால் சிக்கல்அனுமந்தை, கூனிமேடு கடற்கரையில் நேற்று காலை ஜோவிதா, சுஸ்மிதா என்ற இரண்டு பெண் குழந்தைகள் இறந்த நிலையில் உடல் கரைஒதுங்கியது. குழந்தைகளின் உறவினர்கள் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்தனர். மரக்காணம் போலீசார் இது எங்க எல்லையில் நடந்த சம்பவம் இல்லை அதனால் புதுச்சேரி மாநிலம், காலாப்பட்டு காவல்நிலையத்தில் புகார் கொடுங்கள் என்று கூறி அனுப்பினர். அதன் பின் சிறுமியின் உறவினர்கள் காலாப்பட்டு போலீசில் புகார் கொடுக்க சென்றனர். அங்கிருந்த போலீசார் மரக்காணம் காவல் நிலைய எல்லையில் சிறுமியின் சடலம் கரை ஒதுங்கியதால் நீங்கள் அங்குதான் புகார் கொடுக்க வேண்டும் என கூறி திருப்பி அனுப்பினர். உடனே சிறுமியின் உறவினர்கள் மரக்காணம் காவல் நிலையத்திற்கு மீண்டும் புகார் கொடுக்கவந்தனர். அதன் பின் இரு மாநில உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தியபின் சிறுமிகள் இறந்தது குறித்து மரக்காணத்திலும், சிறுமிகளை கடலில் வீசிய ஆனந்தவேலு மீது காலாப்பட்டு காவல் நிலையத்திலம் வழக்கு பதிவு செய்யும் படி கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நள்ளிரவில் போன் கால் கடந்த சில மாதங்களாக கீர்த்திக்கு நள்ளிரவில் போன் அடிக்கடி வந்துள்ளது. உடனே ஆனந்தவேலுவிடம் எனது நண்பர் பேசுகிரார் என்று கூறிவிட்டு மறைவிடமாக சென்று மணிக்கணக்கில் பேசியுள்ளார். இரவில் திடீரென எனது தோழியை பார்க்க செல்கிறோன் என்று கூறிவிட்டு பலமுறை சென்றுள்ளார். இதனால் ஆனந்தவேல் கீர்த்தியிடம் செல்போன் மற்றும் ரகசிய எண்ணை கேட்டு பலமுறை தகராறு செய்து அடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ