| ADDED : டிச 03, 2025 06:21 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட நீதி மன்ற வளாகத்தில், வழக்கறிஞர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தலைமை தாங்கி, பேசுகையில், 'அனைத்து நீதிமன்றங்களிலும் கணினி வழியாக மனுக்கள் பதிவு செய்வதற்கான (இ-பைலிங்) உள்கட்டமைப்பு வசதிகள் முழுமையாக செய்து தரப்பட வேண்டும். அதன் பிறகே, இ-பைலிங் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். வழக்கறிஞர்கள் சேமநல நிதியை 25 லட்சம் ரூபாயாக உயர்த்திட வேண்டும் மற்றும் வழக்கறிஞர்களுக்கான இன்சூரன்ஸ் விதிகள் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து, அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களும், கூட்டுக்குழு கூட்டங்கள் நடத்திட வேண்டும். வழக்கறிஞர்களின் கோரிக்கைகள் குறித்து பார்கவுன்சில் மூலம் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்' என்றார். நிகழ்ச்சியில், வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன், வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் காளிதாஸ், துரைமுருகன், சஞ்சய்காந்தி, பிரின்ஸ் சோமு, சரவணன், பழங்குடியினர் நல செயல்பாட்டாளர் வழக்கறிஞர் அகத்தியன் உட்பட பலர் பங்கேற்றனர்.