உங்கள் தொகுதியில் முதல்வர் திட்ட ஒதுக்கீடு... ரூ.505 கோடி: விழுப்புரம் மாவட்டத்தில் பணிகள் தீவிரம்
விழுப்புரம் மாவட்டத்தில், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில், 38 கோரிக்கைகள் ஏற்கப்பட்ட நிலையில் ரூ.505 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் 10 முக்கியமான பிரச்னைகள் தீர்க்கப்படும் என முதல்வர் ஸ்டாலின், கடந்த 2022 ம் ஆண்டு மே 7ம் தேதி அறிவித்தார். இத்திட்டத்தின்படி, அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் அவர் கடிதம் எழுதி, தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத முக்கியமான, 10 கோரிக்கைகளை, அந்தந்த கலெக்டர்களிடம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து, அனைத்து எம்.எல்.ஏ.,க்கள் சார்பில் கலெக்டர்களிடம் கோரிக்கை பட்டியல் அளிக்கப்பட்டன.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள, 7 தொகுதிகளிலும், 67 முக்கியமான பிரச்னைகள் குறித்து, அந்தந்த எம்.எல்.ஏ.,க்கள் சார்பில், கலெக்டரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டன.இவற்றில், 38 கோரிக்கைகள் ஏற்கப்பட்டு, ரூ.505 கோடி ஒதுக்கீடு செய்து அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டு, திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  7 தொகுதிகளில் பணிகள்
செஞ்சி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., மஸ்தான் சார்பில், பிரச்னைகள் குறித்து மனு அளிக்கப்பட்டன.  அதில், ரூ.11.83 கோடி திட்ட மதிப்பிலான, 3 கோரிக்கைள் ஏற்கப்பட்டன.அதேபோல மயிலம் தொகுதி பா.ம.க., எம்.எல்.ஏ., சிவக்குமார் சார்பில், அளித்த கோரிக்கைகள் மீது, ஆய்வு செய்து, ரூ.43.55 கோடி திட்ட மதிப்பிலான 7 கோரிக்கைகளும், திண்டிவனம் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அர்ச்சுனன் சார்பில், அளிக்கப்பட்ட மனுக்களில், அந்த தொகுதியில், ரூ.6.77 கோடி திட்ட மதிப்பிலான, 5 கோரிக்கைளும் ஏற்கப்பட்டன.மேலும், வானுார் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சக்கரபாணி சார்பில், அளிக்கப்பட்ட மனுக்களில், தொகுதியில், ரூ.32.47 கோடி திட்ட மதிப்பிலான 7 கோரிக்கைளும், விழுப்புரம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., லட்சுமணன் சார்பில், அளிக்கப்பட்ட மனுக்களில், தொகுதியில், ரூ.315.05 கோடி திட்ட மதிப்பிலான, 6 கோரிக்கைகளும் ஏற்கப்பட்டன.விக்கிரவாண்டி தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக இருந்து மறைந்த புகழேந்தி 10 பிரச்னைகள் குறித்து மனு அளித்திருந்தார். இதில், 7 கோரிக்கைகள் ஏற்கப்பட்டன.இதையடுத்து கடந்தாண்டு நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க., எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா, முக்கிய பிரச்னைகள் குறித்து வலியுறுத்தியதின் பேரில், இத்தொகுதியில், ரூ.51.21 கோடி திட்ட மதிப்பிலான திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.திருக்கோவிலுார் தொகுதி எம்.எல்.ஏ.,வான பொன்முடி சார்பில், 7 பிரச்னைகள் குறித்து, விழுப்புரம் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.  இத்தொகுதியில், ரூ.44 கோடி திட்ட மதிப்பிலான 3 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  விரைந்து முடிக்க நடவடிக்கை
இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் படி மாவட்டத்தில் 38 பணிகள் மேற்கொள்ளப்பட்டதில், 20 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் உத்தரவின் படி, மீதமுள்ள, 18 பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,' என்றனர். -நமது நிருபர் -