தீபாவளி போனஸ் வழங்கக்கோரி ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா
கோட்டக்குப்பம் : தீபாவளி போனஸ் வழங்கக் கோரி ஒப்பந்த தொழிலாளர்கள், கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலக வளாகத்தில் இரண்டாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோட்டக்குப்பம் நகராட்சியில் 90 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தனியார் ஒப்பந்தகாரர்கள் மூலம் நியமிக்கப்பட்டுள்ள இவர்களுக்கு, தீபாவளி போனஸ் வழங்குவதாக கூறியிருந்தனர்.ஆனால், தீபாவளி போனஸ் வழங்கப்படாததை கண்டித்தும், பணிக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக் கோரியும் நேற்று முன்தினம் பணியை புறக்கணித்து, கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகம் எதிரில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.நேற்று காலை முதல் இரண்டாவது நாளாக நகராட்சி அலுவலக வளாகத்தில், தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். நகர்மன்ற தலைவர் ஜெயமூர்த்தி, கமிஷனர் புகேந்திரி பேச்சுவார்த்தை நடத்தினர்.அதில், தீபாவளி போனஸ் வழங்கினால் மட்டுமே பணியை தொடருவோம் என உறுதியாக ஒப்பந்த தொழிலாளர்கள் தெரிவித்து விட்டனர். இதையடுத்து, ஒப்பந்ததாரர் 2,000 ரூபாய், 25வது வார்டு கவுன்சிலர் சரவணன் 500 ரூபாய் வீதம் 2,500 ரூபாய் போனசாக வழங்குவதாக தெரிவித்தனர். இதையேற்று, ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.