வீடூரில் புதிய கல்குவாரி தடை விதிக்க கோரிக்கை
விழுப்புரம : வீடூர் அருகே விவசாய நிலப்பகுதியில் அமைக்கப்படும் கல் குவாரியை தடை செய்யக்கோரி, அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.மனு விபரம்:திண்டிவனம் தாலுகா வீடூர் ஊராட்சியில், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு மத்தியில் 33 ஏக்கர் பரப்பில் தனியார் கல்குவாரிகள் மற்றும் கிரஷர் பிளாண்ட் அமைத்து வருகின்றனர். இதனால், சுற்றியுள்ள அனைத்து விவசாய நிலங்களும், குடியிருப்புகளும் பாதிக்கப்படும்.இதனருகே வீடூர் அணை இருப்பதால், கல் குவாரிக்கு வைக்கப்படும் வெடியால் அணை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.இந்த பகுதிகளில் எண்ணற்ற மயில்கள் உள்ளதால், அவைகளின் உயிர்களுக்கும் ஆபத்து ஏற்படும்.கிரஷரில் ஏற்படும் காற்று மாசு காரணமாக விவசாய பயிர்களும் பாதிக்கும், அணைக்கு வரும் பறவைகள் திசை மாறிப் போகும். சுற்றியுள்ள கிராமத்தினருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும், புதிய கல் குவாரிக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.