திண்டிவனத்தில் மாவட்ட மருத்துவமனை விரைவில்... ரூ.60 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணி ஜரூர்
திண்டிவனம் : திண்டிவனத்தில் 60 கோடி ரூபாய் செலவில் மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டும் பணி ஜரூராக நடைபெற்று வரும் நிலையில், வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.திண்டிவனம் அரசு மருத்துவமனை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக குறுகிய இடத்தில் போதுமான கட்டமைப்பு வசதியின்றி செயல்பட்டு வந்தது. தமிழக அரசின் மருத்துவ மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு, பிப்ரவரி 5ம் தேதி திண்டிவனம் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து, மருத்துவமனையின் மருத்துவ கட்டமைப்பை உயர்த்தும் வகையில் 60 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கீடு செய்தது.அதனைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை மூலம் கடந்த ஆண்டு ஜூலை மாதம், கட்டுமானப் பணி துவங்கியது. 18 மாதங்களுக்குள் முடிப்பதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு 2 பிளாக்குகளாக கட்டடங்கள் கட்டும் பணி முழு வீச்சில் நடக்கிறது.முதலாவது பிளாக் தரைத்தளம் மற்றும் 5 மாடிகளைக் கொண்ட மகப்பேறு மருத்துவமனையாக கட்டப்படுகிறது. இங்கு, 1 வயது முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் சிகிச்சை பிரிவுகளும் அடங்கும்.இதன் அருகே இரண்டாவது பிளாக் 5 மாடி கட்டடங்களாக அவரச சிகிச்சை பிரிவு, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சிகிச்சை பிரிவு, டயலிசஸ் பிரிவு, இதய சிகிச்சை பிரிவு, தீக்காய சிகிச்சை பிரிவு, டி.சி.ஸ்கேன், ட்ரூமோ வார்டு அறுவை சிகிச்சை பிரிவு, நரம்பியல் சிகிச்சை பிரிவு ஆர்த்தோ சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் கொண்ட கட்டடமாக கட்டப்படுகிறது.மேலம், வளாகத்தில் குளிர்சாதன வசதி கொண்டு நவீன மார்ச்சுவரி, புறக்காவல் நிலையம், சமையலறை, மருத்துவ கண்காணிப்பு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகம் தொடர்பான கட்டடங்கள் அமைக்கும் பணி கட்டப்படுகிறது.இதுகுறித்த ஒப்பந்ததாரர் கூறுகையில், 'அனைத்து பணிகளும் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிந்துவிடும். தற்போது, எலக்ட்ரிக் பணிகள், பிரசவ வார்டில் மேல்தளப்பணிகள், லிப்ட அமைக்கும் பணி உள்ளிட்ட இறுதி கட்ட பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது' என்றார்.
விபத்து உயிர் பலியை தடுக்க வாய்ப்பு
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் அமைந்துள்ளது திண்டிவனம் அரசு மருத்துவமனை. இதனால் அடிக்கடி சாலை விபத்துகளில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் வருபவர்கள் சென்னை, புதுச்சேரி ஜிப்மர் மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனக்கு அனுப்புவது வழக்கமாக உள்ளது. தற்போது தரம் உயர்த்தப்பட்டு அனைத்து வசதிகளுடன் கூடிய மாவட்ட தலைமை மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்கு வரும் நேரத்தில், இங்கிருந்து மற்ற மருத்துவமனைகளுக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைப்பது முற்றிலும் குறைய வாய்ப்பு உள்ளது.