திண்டிவனத்தில் தி.மு.க.,வினர் குஸ்தி
திண்டிவனம்: திண்டிவனத்தில் தி.மு.க.,வினருக்குள் நடந்த மோதலால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா அலுவலகம் எதிரே நேற்று காலை 11:30 மணியளவில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு, 29வது வார்டைச் சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் அரும்புவின் கணவர் குணசேகருக்கும் அதே வார்டு முன்னாள் கவுன்சிலர் பாஸ்கருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை குறித்து, நகர்மன்ற தலைவரின் கணவரான ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.அப்போது, குணசேகருக்கும், பாஸ்கருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், குணசேகர் தாக்கப்பட்டார். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலானது. தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக குணசேகர் அளித்த புகாரின் பேரில் இதுகுறித்து திண்டிவனம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.