விழுப்புரம் : விழுப்புரத்தில் நடந்து வரும் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மீதான பாலியல் மேல்முறையீடு வழக்கு விசாரணை வரும் 22ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு, பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., ராஜேஷ்தாசுக்கு, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. மேலும், புகார் அளிக்க சென்ற அந்த பெண் அதிகாரியின் காரை மறித்ததாக முன்னாள் எஸ்.பி., கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதித்து, கடந்தாண்டு ஜூன் 16ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.இதனை எதிர்த்து இருவரும், விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதன் மீதான விசாரணையில் அரசு தரப்பும், முன்னாள் எஸ்.பி., தரப்பும் வாதிட்டு முடித்தனர். முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., ராஜேஷ்தாஸ் தரப்பினர் தொடர்ந்து அவகாசம் கேட்டு வந்த நிலையில், வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்றக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.இம்மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி, வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்ற முடியாது. விழுப்புரம் கோர்ட், இந்த வழக்கை ஜனவரி 24க்குள் விசாரித்து, தீர்ப்பளிக்கவும் உத்தரவிட்டார்.அதனையொட்டி மேல்முறையீட்டு வழக்கு நேற்று விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜேஷ்தாஸ் தரப்பு வழக்கறிஞர், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் உத்தரவு வரும் வரை விசாரணையை ஒத்திவைக்க கோரினார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதி பூர்ணிமா, ஐகோர்ட் உத்தரவின்படி, வரும் 24ம் தேதிக்குள் வழக்கை முடிக்க வேண்டும். அதனால் வழக்கின் விசாரணையை 22ம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் சுப்ரீம் கோர்ட் உத்தரவை சமர்ப்பிக்கலாம். இல்லையெனில் உங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க வேண்டும் என, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., தரப்புக்கு உத்தரவிட்டார்.