விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், இன்று பள்ளிகள் திறக்கப்பட இருப்பதையொட்டி, அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு அரசு சார்பில் இன்று இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது.தமிழக அரசு சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு தோறும் பள்ளி திறக்கும் நாளன்று, இலவச பாட புத்தகங்கள், சீருடைகள், நோட்டுகள், புத்தக பைகள், காலணிகள் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி இந்த 2024-25 கல்வியாண்டிற்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, இன்றே மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது.சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பாடநுால் கழகத்திலிருந்து, விழுப்புரம் மாவட்டத்திற்கு புத்தகங்கள் கொண்டு வரப்பட்டு, விழுப்புரம் நகராட்சி ஆண்கள் பள்ளி, திண்டிவனம் வால்டர் ஸ்கடர் பள்ளி, செஞ்சி ராஜாதேசிங்கு பள்ளி உள்ளிட்ட மையங்களில் கடந்த மாதம் வைக்கப்பட்டது.அங்கிருந்து, கல்வி மாவட்டங்கள் வாரியாக புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு, பிறகு அந்தந்த பள்ளிகளுக்கும் கடந்த வாரம் அனுப்பி வைத்து தயாராக உள்ளது.மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள இலவச பொருள்கள் விபரம்:1ம் வகுப்புலிருந்து பிளஸ் 2 வரை இலவச பாட புத்தகங்கள் 73,740 மாணவர்கள், 77,711 மாணவிகள் என 1 லட்சத்து 51 ஆயிரத்து 451 பேருக்கு வழங்கப்பட உள்ளது.இதே போல், இலவச நோட்டுகள் 1ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்பு வரை 64,573 மாணவர்கள், 66,155 மாணவிகள் என 1 லட்சத்து 30 ஆயிரத்து 728 பேருக்கு வழங்கப்பட உள்ளது. புத்தகப் பையானது 1ம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வகுப்பு வரை 73,740 மாணவர்கள், 77,711 மாணவிகள் என மொத்தம் 1 லட்சத்து 51 ஆயிரத்து 451 பேருக்கு வழங்கப்பட உள்ளது.இதே போல், பள்ளி சீருடைகள் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 48,443 மாணவர்கள், 49,873 மாணவிகள் என 98,316 பேருக்கு வழங்கப்படும். ஜாமண்ட்ரி பாக்ஸ்கள் 6ம் வகுப்புலிருந்து 9ம் வகுப்பு வரை 10,929 மாணவர்கள், 10,732 மாணவிகள் என 21 ஆயிரத்து 661 பேருக்கும் வழங்கப்பட உள்ளது.உலக வரை படங்கள் 6ம் வகுப்பிற்கு மட்டும் 3,182 மாணவர்கள், 3,276 மாணவிகள் என 6,458 பேருக்கு வழங்கப்பட உள்ளது.கலர் பென்சில்கள் 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை, 20,162 மாணவர்கள், 20,938 மாணவிகள் என 41,100 பேருக்கு வழங்கப்படும். ஷூ மற்றும் சாக்ஸ்கள் 6 முதல் 10ம் வகுப்பு வரை 38,030 மாணவரகள், 38,484 மாணவிகள் என 76,514 பேருக்கு வழங்கப்படும்.காலணிகள் 1 முதல் 5ம் வகுப்பு வரை 26,543 மாணவர்கள், 27,671 மாணவிகள் என 54,214 பேருக்கு வழங்கப்பட உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.