| ADDED : பிப் 06, 2024 06:07 AM
விழுப்புரம் ரயில்வே மேம்பாலத்தில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பர ஆக்கிரமிப்பு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து, போலீசார் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்துள்ளனர். விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் மேல் பகுதியில் இரு புறமும் உள்ள சுற்றுச் சுவற்றின் மீது, தொடர்ந்து அரசியல் கட்சியினர் மற்றும் பிற இயக்கத்தினர் சுவர் விளம்பரம் எழுதி ஆக்கிரமித்து வருகின்றனர்.இதனால், அரசியல் கட்சியினர் இடையே போட்டா போட்டி ஏற்பட்டு மோதல் எழுவதும் உண்டு. இந்த பிரச்னை போலீசாருக்கு தீராத தலைவலியாக இருந்தது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விழுப்புரம் டவுன் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ரயில்வே மேம்பால சுற்றில் இருபுறமும் அரசியல் கட்சி விளம்பரங்களை அழித்தும், விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்துள்ளனர்.அதில், சாலை போக்குவரத்து விதிகள், மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது, ஹெல்மெட் அணிவதன் அவசியம் போன்றவை குறித்து அழகிய ஓவியங்களும், மற்றொரு சுவற்றில் பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, அவசர தொலை பேசி எண் போன்ற விழிப்புணர்வு ஓவியங்களும் வரைந்துள்ளனர்.இந்த சுவற்றில் விளம்பரங்கள் எழுதவும் தடை விதித்தும், போலீசார் எச்சரித்துள்ளனர். விழுப்புரம் டவுன் போலீசாரின் இந்த நடவடிக்கை, மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.