உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோர்ட்டில் ஆஜராக பொன்முடிக்கு உத்தரவு

கோர்ட்டில் ஆஜராக பொன்முடிக்கு உத்தரவு

விழுப்புரம்: செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் வரும் நவ., 11ம் தேதி, பொன்முடி எம்.எல்.ஏ., உள்ளிட்டோர், கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா பூத்துறை செம்மண் குவாரியில் விதிமீறி செம்மண் எடுத்து அரசுக்கு ரூ. 28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, பொன்முடி எம்.எல்.ஏ., அவரது மகன் கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன், சதானந்தம், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாதன் ஆகியோர் மீது, கடந்த 2012ம் ஆண்டு, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் 57 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டு, 56 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். இதில், 30 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கோதகுமார், சதானந்தம், கோபிநாதன் ஆஜராகினர். பொன்முடி, கவுதமசிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜ மகேந்திரன் ஆஜராகவில்லை. இவ்வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது குறித்து அரசு தரப்பில் கடைசி சாட்சியான மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., ராமலிங்கம் ஆஜராகி, சாட்சியம் அளித்தார். அவரிடம், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளின் விசாரணை முடிந்துள்ள நிலையில், வழக்கு விசாரணையை வரும் நவ., 11ம் தேதிக்கு ஒத்திவைத்தும், அன்று பொன்முடி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என, மாவட்ட நீதிபதி மணிமொழி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ