உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அதிக சோலார் பேனல் பொருத்தும் கிராமத்துக்கு ரூ. 1 கோடி

அதிக சோலார் பேனல் பொருத்தும் கிராமத்துக்கு ரூ. 1 கோடி

வீடுகளில் சூரிய ஒளி மின்சார பேனல்கள் அமைக்க மத்திய அரசு மானியம் வழங்கி ஊக்குவிப்பதுடன், அதிக சோலார் பேனல்கள் பொருத்தும் கிராமத்திற்கு ரூ. 1 கோடி நிதி உதவியும் வழங்கப்படுகிறது.மத்திய அரசு, சூரிய மின் சக்தியை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு வீட்டுக்கும் சூரிய ஒளி மின்சாரம் கிடைக்க பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி சூரிய சக்தி மின்சாரத்தை தயாரிக்கும் பேனல்களை அமைக்கும் வீடுகளில், மின் உற்பத்தி தொடர்பாக, மின்துறை அலுவலர்கள் மூலம் கணக்கிடப்படும். அதில் அவர்களது வீட்டிற்கு உபயோகப்படுத்தப்பட்ட மின்சார யூனிட்டுகளை கழித்து, உபரி மின்சாரம் மின்துறையில் பதிவேற்றம் செய்யப்படும். பருவ மழை காலங்களில் சோலார் மின் உற்பத்தி குறையும்போது, மற்ற மாதங்களில் உபரியாக உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் அவர்களது வீட்டிற்கான மின்சார கட்டண 'பில்'லில் கழித்து கொள்ளப்படும். இதன் மூலம் மக்கள் தங்கள் மின் கட்டணத்தை சேமித்து கொள்ள முடிகிறது. தரத்துடன் அமைக்கப்படும் சோலார் பேனல்கள் 20 ஆண்டுகள் வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

அரசு மானியம்

வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்துவதற்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. ஒரு கிலோ வாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய சக்தி அலகை அமைத்தால் ரூ. 30 ஆயிரம்; 2 கிலோ வாட் அமைப்புக்கு ரூ.60 ஆயிரம்; 3 கிலோ வாட் மற்றும் அதற்கு மேலான அலகுக்கு ரூ.78 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. சூரிய திட்ட பணிகள் முடிவுற்ற, 7 முதல் 30 நாட்களுக்குள் மானிய தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

வங்கி கடனுதவி

சோலார் பேனல்கள் அமைக்க வங்கிகள் மூலம் உடனடியாக கடனுதவி வழங்கப்படுகிறது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 6.75 சதவீத மானிய வட்டியில் ரூ.2 லட்சம் வரை கடன் பெற்றுக்கொள்ளலாம். இதனை 10 ஆண்டுகள் எளிய தவணை முறையில் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

இத்திட்டத்தின் மூலம் வீடுகளில் சோலார் பேனல்கள் அமைக்க உரிமையாளர்கள், இணைதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். சூரிய சக்தி தகடுகளை அமைக்க ஏற்ற வகையிலான வீடாக இருக்க வேண்டும். சூரிய சக்தி தகடுகளை அமைக்கும் நிறுவனங்களை நுகர்வோர்களே தேர்வு செய்து கொள்ளலாம்.

மாதிரி கிராமங்கள் தேர்வு

சூரிய சக்தி வீடு இலவச மின்சார திட்டத்தை கிராம புறங்களில் ஊக்குவிக்கும் பொருட்டு மக்கள் தொகை, மின் நுகர்வோர் எண்ணிக்கை போன்ற பலவற்றை அடிப்படையாக கொண்டு, தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், 5 மாதிரி சோலார் கிராமங்கள் கலெக்டரின் மேற்பார்வையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மூங்கில்துறைப்பட்டு, செங்குறிச்சி, திருநாவலுார், நைனார்பாளையம், தேவபாண்டலம் ஆகிய கிராமங்கள் மாதிரி சோலார் கிராமங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அக்கிராமங்களில் சோலார் பேனல்கள் அமைப்பதில் உள்ள பலன்கள் குறித்து மின்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இம்மாவட்டத்தில், இதுவரை 165 பேர் தங்களது வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் பொருத்தியுள்ளதாக மின்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ரூ. 1 கோடி நிதி

மாதிரி கிராமங்களில் எந்த கிராமத்தில் அதிக எண்ணிக்கையிலான வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளதோ அந்த கிராமத்திற்கு மத்திய அரசின் மூலம் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது. இந்த நிதியில் கிராமத்தில் உள்ள ஊராட்சி அலுவலகம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சமுதாயக்கூடம் போன்ற பொது இடங்களுக்கு சோலார் பேனல்கள் அமைத்து கொள்ளலாம்.

யாரை தொடர்பு கொள்வது

வீடுகளில் சோலார் பேனல்கள் அமைக்க pmsuryaghar.gov.inஎன்ற இணைதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், கடலுார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் - 94458 55922 (மாவட்ட மின் துறை பி.ஆர்.ஓ.,), விழுப்புரம் மாவட்டத்தினர் - 94458 55750 (மின்துறை செயற்பொறியாளர்), கள்ளக்குறிச்சி மாவட்டத்தினர் - 94990 50377 (உதவி செயற்பொறியாளர்), புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்கள்-94890 80373, 94890 80374 (மின்துறை அலுவலகம்) மற்றும் ee2ped.py.gov.in. என்ற இணைய தள முகவரியில் தொடர்பு கொள்ளலாம். -நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை