| ADDED : ஜன 30, 2024 07:45 AM
விழுப்புரம் : முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை நாளை 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.தமிழகத்தில் கடந்த 2006-2011ம் ஆண்டில் நடந்த தி.மு.க., ஆட்சியின்போது, விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பூத்துறை அரசு செம்மண் குவாரியை ஏலம் எடுத்து, விதிமீறி செம்மண் எடுத்து அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.இதுதொடர்பாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., உட்பட 8 பேர் மீது கடந்த 2012ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் விசாரணையில் அரசு தரப்பின் 67 சாட்சிகளில், இதுவரை 11 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். அவர்களில் பலர் பிறழ் சாட்சியாகினர்.இந்நிலையில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கவுதமசிகாமணி எம்.பி., ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன் ஆகியோர் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை, விழுப்புரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் இருந்து, கோர்ட்டுக்கு கொண்டுவரக் கோரி தனித்தனியாக தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, வழக்கின் விசாரணையை நாளை 31ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.