| ADDED : ஜன 07, 2024 04:44 AM
விழுப்புரம்: முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு மீதான விசாரணை வரும் 19ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.தமிழகத்தில் கடந்த 2006-2011ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பூத்துறை கிராமத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28.36 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.இதுகுறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., உட்பட 8 பேர் மீது கடந்த 2012ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.இவ்வழக்கில், அரசு தரப்பு சாட்சிகள், பிறழ் சாட்சியம் அளித்து வருவதால், அரசு தரப்புக்கு உதவியாக செயல்பட தங்களை அனுமதிக்கக்கோரி அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கடந்த செப்டம்பர் 8ம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது.அப்போது ஆஜரான ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர்கள், அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு தங்களை அனுமதிக்க கோரி வாதிட்டனர்.அரசு தரப்பு வழக்கறிஞர் கார்த்திகேயன் மற்றும் பொன்முடி தரப்பு வழக்கறிஞர்கள் ஜெயக்குமார் மனுவை தள்ளுபடி செய்திட வாதிட்டனர்.அதனைத் தொடர்ந்து, நீதிபதி பூர்ணிமா, வழக்கு விசாரணையை வரும் 19ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.