மாநில சிறுபான்மையினர் ஆணையம் விழுப்புரத்தில் கலந்துரையாடல் கூட்டம்
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர், உறுப்பினர்களின் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருண் தலைமை தாங்கினார். கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் முன்னிலை வகித்தார். இதில், ஆணைய தலைவர் அருண் பேசியதாவது;பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று சிறுபான்மையினர் மக்களுக்கு அரசு செயல்படுத்தும் திட்டங்கள் சென்றடைந்துள்ளது குறித்து கள ஆய்வு மேற்கொண்டும், கலந்துரையாடல் கூட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.சிறுபான்மையினர் பெண்கள் பெற்ற நலத்திட்ட உதவிகள் மூலம் எந்த வகையில் வாழ்வில் முன்னேற்றியுள்ளனர் என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தமிழ் மொழியை தாய்மொழியாக இல்லாமல் வேறு மொழி பேசுகிற அனைவரும் சிறுபான்மையினர்களாவர். அவர்களுக்கும் நலத்திட்டங்கள் மற்றும் பாதுகாப்புகள் வழங்கப்படும்.விழுப்புரம் மாவட்டத்தில் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கம் மூலம் சிறுபான்மையினர் ஆதரவற்ற, முதியோர், கணவரால் கைவிடப்பட்ட வறுமையில் வாழும் முஸ்லிம் பெண்களுக்கு உதவ மாதாந்திர உதவிகள் வழங்குதல், கைவினைப்பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சி அளித்தல், இருப்பிட உதவி, மருத்துவ உதவி, தொழில் துவங்க கடனுதவி வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் 2022-23ம் ஆண்டு ரூ. 20 லட்சத்திற்கு மேலாகவும், 2023-24ம் ஆண்டிற்கு ரூ. 25 லட்சத்திற்கு மேலாகவும், 2024-25ம் ஆண்டிற்கு ரூ. 25 லட்சத்திற்கு மேலாக என 681 முஸ்லிம் பெண்கள் நலத்திட்ட உதவிகள் பெற்று பயனடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் 542 பேருக்கு ரூ. 55 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அப்போது, ஆணைய துணைத் தலைவர் அப்துல்குத்துாஸ் என்கிற இறையன்பன் குத்துாஸ், எஸ்.பி., சரவணன், டி.ஆர்.ஓ., அரிதாஸ், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி)பத்மஜா, திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்ஷூ நிகம், மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, ரவிக்குமார் எம்.பி., மற்றும் சிறுபான்மையினர் நல இயக்ககம் துணை இயக்குநர் ஷர்மிலி, ஆணைய உறுப்பினர்கள் நஜ்முதீன், பிரவீன் குமார் டாட்டியா, ராஜேந்திரபிரசாத் ஜெயின், ரமீட் கபூர், முகம்மது ரஃபி, வசந்த், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் (பொறுப்பு) தமிழரசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.