| ADDED : ஜூலை 26, 2011 11:29 PM
தியாகதுருகம் : தியாகதுருகம் அடுத்த புக்குளம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து சிலர் வீடுகளை கட்டி வருகின்றனர். இப்பகுதியில் அதிகரித்துவரும் ஆக்கிரமிப்புகளை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உளுந்தூர்பேட்டை- சேலம் இடையே நான்குவழிச்சாலை அமைக்கும் திட்டத்தின் கீழ் தியாகதுருகம் நகரின் மையத்தில் உள்ள மலையின் தெற்கே பைபாஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை புக்குளம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளது. பை-பாஸ் சாலை அமைக்கும் பணிகள் முடிந்து போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளதால் இச்சாலையை ஒட்டியுள்ள நிலங்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் விவசாய நிலங்களை பிளாட்டுகளாக மாற்றி லாபம் ஈட்டி வருகின்றனர். இதனால் இச்சாலையை ஒட்டியுள்ள புக்குளம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியை சிலர் ஆக்கிரமித்து வீடுகட்டி வருகின்றனர். ஆரம்பத்தில் கூரை வீடுகளாக கட்டியவர்கள் தற்போது ஓட்டு வீடுகளை கட்டி வருகின்றனர். வீட்டின் அருகில் போர்வெல் அமைத்து பட்டா செய்யப்பட்ட இடம் போல ஏகபோக உரிமையுடன் தங்கள் வசதிக்கு வீடுகளை கட்டி வருகின்றனர்.
இப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், இன்னும் சில மாதங்களில் ஏரி பகுதி காணாமல் போகும் அபாயம் உருவாகி உள்ளது. நீர்நிலை பகுதியை ஆக்கிரமிப்பதை ஆரம்பத்திலேயே அரசு அதிகாரிகள் தடுத்து நிறுத்திடவேண்டும். இதே நிலை தொடர்ந்தால் புக்குளம் ஏரி முழுவதும் வீடுகளாக மாறி வெறும் கரை மட்டுமே மிஞ்சும் நிலை ஏற்படும். இப்பகுதியில் இடம் பிடிக்க பலரும் போட்டிபோட்டு வருகின்றனர். பை-பாஸ் சாலை அருகில் இருப்பதால் எதிர்காலத்தில் நல்ல மதிப்புள்ள இடமாக மாறும் என்ற அடிப்படையில் பலரும் இப்பகுதியை வளைத்து போட்டு வருகின்றனர். சிலர் முள்வேலியை போட்டு இடத்தை 'ரிசர்வ்' செய்து வருகின்றனர். வருவாய்துறை அதிகாரிகள் ஏரியில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.