| ADDED : ஆக 03, 2011 10:18 PM
மரக்காணம் : மரக்காணம்- முருக்கேரி சாலையில் இரவு நேரங்களில் தொடரும் வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மரக்காணம், புதுச்சேரி பகுதிக்கு முருக்கேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ளவர்கள் பல்வேறு பணிகளுக்கு தினந்தோறும் செல்கின்றனர். இவர்கள் இரவு நேரத்தில் வீட்டிற்கு குரும்புரம் காட்டு வழியாக மோட்டார் சைக்கிளில் செல்கின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்த சாலை வழியாக செல்பவர்களை வழிமறித்து நகை, பணம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.
இது குறித்து அப்போதைய எஸ்.பி., அதிரடி நடவடிக்கையால் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் வழிப்பறி சம்பவங்கள் முடிவுக்கு வந்தன. கடந்த சில மாதங்க ளாக மரக்காணம்- திண்டிவனம் சாலையில் உள்ள கொள்ளுமேடு, குரும்புரம், ஆலத்தூர் ஆகிய பகுதிகளில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இரவு 8 மணி முதல் 11 மணி வரை மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை பின் தொடர்ந்து வந்து வழி மறித்து நகை, மொபைல் போன், பணம் ஆகியவைகளை மர்ம நபர்கள் அபகரித்துச் செல்கின்றனர். இச்சம்பவங்கள் குறித்து மரக்காணம் போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் புலம்பி வருகின்றனர். இதனால் இரவு 8 மணிக்குமேல் இந்த வழியே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வதை கிராம மக்கள் தவிர்த்து வருகின்றனர். இப்பகுதியில் இரவு நேரத் தில் போலீசார் ரோந்து பணியை தீவிரப் படுத்த முன் வர வேண்டும்.