விழுப்புரம்; நகராட்சிக்கு உட்பட்ட மக்கும் குப்பை பிரித்து உரம் தயாரிக்கும் மையங்களில் மழைநீர் புகுந்த சம்பவத்தை தொடர்ந்து உரம் தயாரித்து வழங்குவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த மையங்களை சீரமைக்க போதிய ஊழியர்கள் இல்லாததால் நகராட்சி அலுவலர்கள் திணறுகின்றனர். விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்டு 42 வார்டுகள் உள்ளன. இங்கு, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களின் வீடுகளில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை, நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம் பிரித்து வாங்கி வருகின்றனர். இந்த குப்பைகளில் மக்கும் குப்பைகள் நகராட்சி வாகனங்கள் மூலம் மாம்பழப்பட்டு சாலை, பொன்னேரி, எருமனந்தாங்கல், துரையரசன்பேட்டை உட்பட, 8 மக்கும் குப்பை பிரித்து உரம் தயாரிக்கும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பிளாஸ்டிக் போன்ற மக்காத குப்பைகள் வாகனங்கள் மூலம் சென்னையில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைக்கு மறு சுழற்சிக்கு கொண்டு செல்லப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் செயல்படும், உரம் தயாரிக்கும் மையத்தில் மக்கும் குப்பைகள் ஒவ்வொரு மையத்திலும் 24 தொட்டிகளில் கொட்டி வைக்கப்பட்டு பதப்படுத்தி, 45 நாட்களிலும் உரம் தயாராகிறது. விவசாயிகள், தன்னார்வலர்கள் மற்றும் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பூங்கா, அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்களில் உள்ள செடிகளுக்கு, இந்த உரத்தை நகராட்சி அலுவலர்கள், இலவசமாக வழங்குகின்றனர். இங்கு, தினந்தோறும் 35 டன் குப்பைகள் சேகரமாகும் நிலையில், 22 முதல் 24 டன் அளவிலான மக்கும் குப்பையில் இருந்து, 15 டன் வரை இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த மையத்தை பராமரிக்க ஒரு இடத்திற்கு 5 நபர்கள் என மொத்தம் 40 பேர் பணியில் உள்ளனர். இந்த மையங்களில் கடந்த 2024 ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையால், வெள்ளநீர் புகுந்தது. இதில், 5க்கும் மேற்பட்ட மையங்களில் உள்ள தொட்டிகளில் புகுந்த மழைநீரால் உரங்கள் வீணாகியதோடு, தொட்டிகளை சீரமைக்க போதிய ஊழியர்கள் இல்லாமல் நகராட்சி அலுவலர்கள் திணறி வருகின்றனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகள் சிலர் கூறியதாவது: நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள, மக்கும் குப்பைகள் மூலம் உரம் தயாரிக்கும் மையங்களில் மேற்புர ஷீட்கள் பெயர்ந்தது, சிமெண்ட் தொட்டிகள் சேதம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டன. இதை சீரமைக்க போதிய ஊழியர்கள் இல்லாதது பெரிய பிரச்னையாக உள்ளது. இங்குள்ள ஊழியர்களும் நகரில் உள்ள கழிவுநீர் அடைப்பை சரி செய்யும் பணிக்கு செல்வதால் மையங்களில் உள்ள உரம் தயாரிக்கும் பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆனாலும், உரம் வாங்க வரும் விவசாயிகளுக்கு இல்லையென கூறாமல் உரங்களை வழங்கி வருகிறோம். கடந்த 6 மாதங்களில் மழைநீரால் 170 டன் உரங்கள் தேக்கமாகி, அதை பதப்படுத்தி வருகிறோம். கடந்தாண்டு மட்டும், 2,300 டன் உரங்கள் தயார் செய்தோம். மழை காலங்களில் இந்த பணியில் தொய்வு வந்தாலும், வெயில் காலங்களில் விரைவாக உரங்களை தயார் செய்கிறோம். கூடுதலாக ஊழியர்கள் இருந்தால் மேலும், கூடுதலாக உரங்கள் தயார் செய்து வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.