ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் 3 நாளாக எரியும் தீயால் ஏராளமான மரங்கள் சேதமாயின. தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் மான், யானை உள்ளிட்ட விலங்குகள், விலை உயர்ந்த மரங்கள் உள்ளன. இங்குள்ள வீரியன் கோயில் வனப்பகுதியில் கடந்த 24 ம் தேதி இரவு திடீரென தீப்பிடித்தது.
காற்றால் வேகமாக பரவிய தீ, 5 கி.மீ., சுற்றளவில் எரிவதால், விலையுர்ந்த மரங்கள் எரிந்து சாம்பலாயின. விலங்குகளும் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தன. இதை தொடர்ந்து, மாவட்ட வனப்பாதுகாவலர் அசோக் குமார் தலைமையில் 30 பேர் கொண்ட குழுவினர் தீயை அணைக்கும் பணியில் கடந்த மூன்று நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். 'வனப்பகுதியில் மாடு மேய்ப்பவர்கள், புதிய முளைப்பதற்காக காய்ந்த புல்களுக்கு தீ வைத்திருக்கலாம்.
மேலும், வனப்பகுதியில் அடித்து வரும் வெயிலாலும் தீவிபத்து ஏற்பட்டுருக்கலாம், ' என, வன ஆர்வலர்கள் தெரிவித்தனர். மாவட்ட வன பாதுகாவலர் அசோக் குமார் கூறுகையில்,'' ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் தீவிபத்திற்கு தற்போது அடித்து வரும் கடும் வெயில் தான் காரணம். தீ ஏற்பட்ட பகுதி முழுவதும் புல்வெளி தான் . இதனால் மரங்கள், விலங்குகளுக்கு சேதம் ஏற்படவில்லை. தற்போது தீ பிடித்த பகுதி செங்குத்தான மலை பகுதியாக இருப்பதால், தீ எளிதில் பற்றி விடுகிறது. தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்,'' என்றார்.