உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வெப்பத்திலிருந்து கால்நடைகளை பாதுகாக்க அறிவுரை

வெப்பத்திலிருந்து கால்நடைகளை பாதுகாக்க அறிவுரை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் வெப்ப அலையில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: கால்நடைகளுக்கு உயர் வெப்பத்தால் ஏற்படும் அயற்சியே பாதிப்பை ஏற்படுத்தும். அதிகமாக உமிழ்நீர் வடிதல், தண்ணீர் பருகுதல், பகலில் குறைவாக தீவனம் உட்கொள்ளுதல், நிழலில் தஞ்சம் புகுதல், வாயைத் திறந்த நிலையில் வேகமாக சுவாசித்தல் போன்றவை வெப்ப அயற்சியின் அறிகுறிகள்.வெப்ப அயற்சியில் இருந்து கால்நடைகளைக் காப்பாற்றுவதற்கு, கால்நடைகளை காலை, மாலை நேரங்களில் வெயிலுக்கு முன்பு மேய்ச்சலுக்கு விட வேண்டும். காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்க வேண்டும். கறவை மாடுகளுக்கு ஒரு நாளைக்கு 4 முதல் 5 முறையாவது தண்ணீர் கொடுக்க வேண்டும். தண்ணீரின் மீது கலப்புத்தீவனத்தை சிறிதளவு துாவும் போது கால்நடைகள் அதிக தண்ணீர் குடிக்கும். தாது உப்புக்கலவை, வைட்டமின்கள் கொடுப்பதன் மூலம் வெப்ப அயற்சி அறிகுறிகள் குறைவதுடன் பால் உற்பத்தி குறையாமல் இருக்கும்.கோழிகளுக்கு அதிகாலைப் பொழுதிலும் இரவிலும் தீவனம் அளிக்க வேண்டும். எல்லா நேரங்களிலும் சுத்தமான குளிர்ந்த குடிநீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குடிநீரில் வைட்டமின்கள் பி-காம்ப்ளக்ஸ், குளுக்கோஸ் கலந்து கொடுக்கலாம்.ஆடுகளுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 முதல் 12 லிட்டர் சுத்தமான தண்ணீர் கொடுக்க வேண்டும். தடுப்பூசிகளை உரிய காலத்தில் போட வேண்டும். ஆடுகளுக்கு பட்டிகளில் தாது உப்புக்கட்டிகளை கட்டுவதன் மூலம் சோடியம், பொட்டாசியம் முதலிய சத்துக்கள் எளிதில் கிடைக்கும்.செல்லப்பிராணிகளை காரின் உள்பகுதியில் அடைத்து வைப்பதையும் நேரடியாக வெயில்படுமாறு உலாவ விடுவதையும் தவிர்க்க வேண்டும். மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மருத்துவமனை, மருந்தகங்களில் கால்நடைகளுக்குத் தேவையான மருந்துகள், தாது உப்புக்கலவைகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டால் ஆம்புலன்ஸை 1962 என்ற எண்ணில் அழைத்து மருத்துவ உதவி பெறலாம், இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி