உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கிடப்பில் ரூ.5 கோடியில் வணிக வளாகம் கட்டும் பணி

கிடப்பில் ரூ.5 கோடியில் வணிக வளாகம் கட்டும் பணி

சிவகாசி: சிவகாசியில் ரூ.5 கோடியில் புதிய வணிக வளாகம் கட்டும் பணி 6 மாதங்களுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டு உள்ள நிலையில், சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாக மாறியதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.சிவகாசி மாநகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டுவதற்காக சாத்துார் ரோட்டில் பஸ் ஸ்டாண்டக அருகே வருவாய்துறைக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலம் நகராட்சி நிர்வாக துறைக்கு வழங்கப்பட்டது. அந்த இடத்தில் 1.75 ஏக்கர் நிலத்தில் புதிய அலுவலகமும், மீதமுள்ள இடத்தில் மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் வணிக வளாகம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இந்த இரு பணிகளுக்கும் 2023 ஜூனில் அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டினார்.ரூ.10 கோடியில் 47 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் நான்கு தளங்களுடன் மாநகராட்சி அலுவலகம் மற்றும் ரூ.5 கோடியில் 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 103 கடைகளுடன் கூடிய வணிக வளாகமும் கட்டும் பணி தொடங்கியது. 18 மாதங்களுக்குள் பணிகளை முடிக்க வேண்டிய நிலையில், கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வந்தது. 2024 மார்ச் ல் மாநகராட்சி அலுவலகம் கட்டுமான பணிக்கு கூடுதலாக ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. வணிக வளாகம் ,தரைத்தளம் மற்றும், முதல் தளத்துடன் 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 103 கடைகளுடன் கட்டப்படுகிறது. கடந்த 6 மாதங்களாக வணிக வளாகம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. மாநகராட்சி கூட்டத்தில் கமிஷனர் கட்டுமான பணிகள் விரைவில் முடிக்கப்படும், சமூக விரோத செயல்கள் நடைபெறுவது குறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார். ஆனால் தற்போது வரை வணிக வளாக கட்டுமான பணிகள் நடைபெறாமல், சுற்றிலும் தடுப்புகள் இல்லாததால் கட்டடத்தில் மது அருந்துதல் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோதிகளின் கூடாரமாகவே மாறிவிட்டது. கட்டடம் முழுவதுமே காலி மது பாட்டில்கள் பிளாஸ்டிக் கப்புகள் கிடக்கிறது. இதனால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் விரைவில் கட்டடத்தை கட்டி முடிக்க வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ