| ADDED : ஜூலை 09, 2024 04:27 AM
விருதுநகர்: விருதுநகரின் நகராட்சி பகுதியான 2வது வார்டு கொய்யாதோப்பு வீதி, சூலக்கரை மேடு, பெத்தனாட்சி நகர், பாண்டியன் நகர் பகுதி மண் ரோடுகளுக்கு மழைக்காலத்திற்குள்ளாவது விமோசனம் கிடைத்து புதிய ரோடு போடமாட்டார்களா என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். விருதுநகர் நகராட்சியின் 2வது வார்டு கொய்யாதோப்பு வீதியிலும் மண் ரோடு அப்பகுதி மக்களை பாடாய் படுத்தி வருகிறது. அதேபோல் வளர்ந்துவரும் பகுதிகளை கொண்டுள்ள ஊராட்சிகளான சிவஞானபுரம், கூரைக்குண்டு, ரோசல்பட்டி, சத்திரரெட்டியபட்டியில் அடிப்படை வசதி குறைபாட்டை நிவர்த்தி செய்யும் திண்டாட்டம் அதிகரித்து வருகிறது.குறுக்கு தெருக்கள் பலவற்றில் மண் ரோட்டில் தான் மக்கள் பயணிக்கின்றனர். அதுவும் கடந்த மழைக்காலங்களில் இடது பக்கம் திருப்பினால் வாகனத்தை வலது பக்கம்மாற்றிவிட செய்யும் அளவுக்கு வழுக்கியது. சூலக்கரைமேடு , பெத்தனாட்சி நகர், மீனாட்சி நகர், பாண்டியன் நகர் பகுதி குறுக்கு தெருக்கள்,காந்திநகர் குறுக்குத்தெருக்கள் பகுதிகளில் ரோடு வசதிகள் சுத்தமாக இல்லை. மண் ரோடாகவே உள்ளன. இவை அமைந்துள்ள ஊராட்சிகள் அனைத்தும் பெரியவை என்பதால் அடிப்படை வசதிகள் எதையும் செய்ய முடியவில்லை.ஊராட்சியில் நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி பணிகளும் தாமதப்படுத்தப்படுகின்றன. இந்தாண்டு இறுதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதால் புதிய நிதியாண்டில் பெறப்படும் நிதி தங்கள் பகுதி வளர்ச்சி பணிக்கு பயன்படுத்தப்படுமா என அம்மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் விபத்து அபாயம் உள்ள மழைக்கால மண் ரோடுகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். நிரந்தர தீர்வாக நகராட்சியை எல்லை விரிவாக்கம் செய்ய வேண்டும்.