சர்வீஸ் ரோட்டில் மின் விளக்குகள் இல்லை; அச்சத்தில் வாகன ஓட்டிகள்
விருதுநகர் : விருதுநகரில் இருந்து லட்சுமி நகர் செல்லும் சர்வீஸ் ரோட்டில் மின் விளக்குகள் இல்லை. இதனால் வாகன விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுவதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டியுள்ளது.விருதுநகரில் இருந்து செல்லும் மதுரை ரோடு, நான்கு வழிச்சாலையில் இணையும் இடத்தில் மேம்பாலம் உள்ளது. இதனை கடந்து லட்சுமி நகர், பெத்தனாட்சி நகரைச் சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள் தினமும் விருதுநகருக்கு வந்து செல்கின்றனர்.இந்த மேம்பாலம், சர்வீஸ் ரோடு அமைத்த நாள் இப்பகுதியில் மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் இரவில் பாதசாரிகள் ரோட்டை கடந்து செல்வது எதிரே வரும் வாகனங்களுக்கு தெரியாததால் பாதசாரிகள் மீது வாகனங்கள் மோதுவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.இப்பகுதி வாகன போக்குவரத்து நிறைந்த பகுதியாக இருப்பதால் மின் விளக்குள் அவசியமாகிறது. எனவே மதுரை ரோடு நான்கு வழிச்சாலையில் இணையும் மேம்பாலம், சர்வீஸ் ரோடு பகுதிகளில் போதிய மின் விளக்குகளை நிறுவி விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.