| ADDED : மே 30, 2024 01:55 AM
சிவகாசி:விருதுநகர் மாவட்டம்,வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளத்தில் அகழாய்வு பணிகள் நடக்கின்றன. தொல்லியல் மேடு என்ற இடத்தில், 25 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டு அதில், முதல் கட்ட அகழாய்வு பணி நடந்தது. அதில், 2 ஏக்கரில் 16 குழிகளில் 3,254 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அடுத்ததாக 2023 ஏப்., 6ல் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் துவங்கின.இதில், 3 ஏக்கரில் 18 குழிகளில் சுடு மண்ணால்ஆன பொம்மை, புகைப்பிடிப்பான் கருவி, காதணி, எடைக்கல், உள்ளிட்ட 4,660 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. முதல் கட்டத்தை விட இரண்டாம் கட்டத்தில் 1,406 பொருட்கள் கூடுதலாக கண்டெடுக்கப்பட்டன. இப்பணி, 2023 அக்., 19ல் முடிவடைந்த நிலையில், இரண்டு கட்ட அகழாய்விலும் கிடைத்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.தற்போது, மூன்றாம் கட்ட அகழாய்விற்காக ஏற்கனவே அகழாய்வு பணிகள் நடந்த இடத்திற்கு அருகே, கிழக்குப் பகுதியில், 1.5 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த இடத்தை சுத்தம் செய்யும் பணி நேற்று துவங்கியது. தொல்லியல் இயக்குனர்பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், ''மூன்றாம் கட்ட அகழாய்விற்கு ஆயத்தப் பணியாக சுத்தம் செய்யும் பணி துவங்கியுள்ளது. ஓரிரு நாட்களில் இப்பணி முடிந்து விடும். ஜூன் முதல் வாரத்தில் அகழாய்வு பணிகள் துவங்கும்,'' என்றார்.