தகுதியுள்ள பெண்கள் அனைவருக்கும் உரிமை தொகை
ராஜபாளையம்: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் அடிப்படையில் விரைவில் தகுதி உள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தெரிவித்தார். ராஜபாளையம் அடுத்த சேத்துார் பேரூராட்சியில் ரூ.5.96 கோடி மதிப்பில் ஏசி வசதி உடன் திருமண மண்டபம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்தார். தென்காசி எம்.பி., ராணி, எம்.எல்.ஏ., தங்க பாண்டியன் முன்னிலை வகித்தனர். ஏசி வசதியுடன் கூடிய திருமண மண்டபம் கட்டுவதற்கு எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1 கோடி, நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.3.46 கோடி, பொது நிதியில் ரூ.1.50 கோடி என மொத்தம் ரூ.5.96 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சேத்துார் போலீஸ் ஸ்டேஷன் அருகே 2 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இப்பணிக்கு அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி பேசியதாவது: கடந்த முறை பெறப்பட்ட 1.60 கோடி விண்ணப்பங்களில் 1.15 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் பெறப்பட்டு உடனடியாக ஆன்லைனில் பதிவு செய்யப்படுகிறது. விரைவில் தகுதி உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என முதல்வர் கூறி உள்ளார் என்றார். மதுரை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மணிகண்டன், பேரூராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன பங்கேற்றனர்.