ராணுவ வீரரின் மனைவியை தாக்கிய பஸ் டிரைவர் கைது
தளவாய்புரம், டிச. 25-- தளவாய்புரம் அடுத்த நக்கநேரியை சேர்ந்தவர் வினோத் குமார் ராணுவ வீரர். இவரது மனைவி முனிதா 26, ராஜபாளையத்தில் டைப்ரைட்டிங் பயிற்சிக்காக மினி பஸ்சில் சென்று வருகிறார். மினி பஸ் டிரைவர் ராஜ்மோகன் முனிதாவிடம் அலைபேசி எண் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். கடந்த வாரம் முனிதாவின் கைப்பையை பிடுங்கி வைத்துக் கொண்டு தகராறு செய்ததுடன் அவர் குறித்து கணவர் வினோத் குமாரிடம் அலைபேசியில் தவறாக ராஜ்மோகன் கூறியுள்ளார். இதுகுறித்து டிரைவர் வீட்டிற்கு தம்பி இசக்கி முத்து உடன் முனிதா சென்று கேட்டபோது டிரைவர், அவரது மனைவி ராஜலட்சுமி, தாய் வீரம்மாள் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விட்டனர். தளவாய்புரம் போலீசார் மூவர் மீதும் வழக்கு பதிந்து ராஜ்மோகனை கைது செய்துள்ளனர்.