இரவார்பட்டி - அச்சங்குளம் இடையே பாலம் சேதம் கிராம போக்குவரத்திற்கு சிரமம்
சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் இரவார்பட்டி அச்சங்குளம் இடையே வைப்பாற்றில் கட்டப்பட்ட தரைப்பாலம் சேதமடைந்துள்ளதால் 20 ஆண்டுகளாக 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போக்குவரத்திற்கு சிரமப்படுகின்றனர். இப்பகுதியில் இரவார் பட்டி அச்சங்குளம் கோட்டைப்பட்டி சூரார்பட்டி உள்பட 10 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு அதிக அளவில் பட்டாசு ஆலைகள், விவசாய நிலங்கள் உள்ளன. இவர்களின் போக்குவரத்திற்காக இரவார் பட்டி அச்சங்குளம் இடையே 20 ஆண்டுகளுக்கு முன்பு வைப்பாற்றில் தரைப்பாலம் கட்டப்பட்டது. இதன் வழியே 10 கிலோமீட்டர் துாரத்திலேயே ஏழாயிரம் பண்ணை, வெம்பக்கோட்டை செல்ல முடியும். பட்டாசு ஆலைகளுக்கு வாகனங்களும், விவசாய காலங்களில் பொருட்களை கொண்டு செல்வதற்கும் பாலம் பயன்படும் வகையில் கட்டப்பட்டது. ஆனால் கட்டப்பட்ட ஒரு ஆண்டிலேயே தரைப்பாலம் முழுமையாக சேதம் அடைந்து விட்டது. இதனால் டூவீலர் உட்பட எந்த வாகனங்களும் சென்று வர முடியவில்லை. ஆற்றினை கடந்து நடந்து மட்டுமே செல்ல முடியும். மழை பெய்து தண்ணீர் வந்தால் நடந்து செல்லவும் வழியில்லை. இதனைத் தொடர்ந்து இப்பகுதியினர், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் 20 கிலோ மீட்டர் சுற்றியே ஏழாயிரம் பண்ணை, சாத்துார், வெம்பக்கோட்டைக்கு செல்ல முடிகின்றது. எனவே இப்பகுதியில் தரைப் பாலத்தை முற்றிலும் அகற்றிவிட்டு மேம்பாலம் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.