கிடப்பில் வணிக வளாகம் கட்டும் பணி சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறியதால் அதிருப்தி
சிவகாசி : சிவகாசி மாநகராட்சியில் ரூ.5 கோடியில் புதிய வணிக வளாகம் கட்டும் பணி 6 மாதங்களுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டு உள்ள நிலையில், சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாக மாறியதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சிவகாசி மாநகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டுவதற்காக சாத்துார் ரோட்டில் பஸ் ஸ்டாண்டு அருகே வருவாய்துறைக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலம் நகராட்சி நிர்வாக துறைக்கு வழங்கப்பட்டது. அந்த இடத்தில் 1.75 ஏக்கர் நிலத்தில் புதிய அலுவலகமும், மீதமுள்ள இடத்தில் மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் வணிக வளாகம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இந்த இரு பணிகளுக்கும் 2023 ஜூனில் அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.10 கோடியில் 47 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் நான்கு தளங்களுடன் மாநகராட்சி அலுவலகம் ரூ.5 கோடியில் 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 103 கடைகளுடன் கூடிய வணிக வளாகமும் கட்டும் பணி தொடங்கியது. 18 மாதங்களுக்குள் பணிகளை முடிக்க வேண்டிய நிலையில், கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வந்தது. வணிக வளாகம் தரைத்தளம் , முதல் தளத்துடன் 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 103 கடைகளுடன் கட்டப்படுகிறது. கடந்த 8 மாதங்களாக வணிக வளாகம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் தற்போது இந்த கட்டடம் மது அருந்துதல் சமூக விரோத செயல்கள் நடைபெறும் கூடாரமாக மாறிவிட்டது. கட்டடம் முழுவதுமே காலி மது பாட்டில்கள் பிளாஸ்டிக் கப்புகள் கிடக்கிறது. இதனால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே உடனடியாக கட்டுமான பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். கமிஷனர் சரவணன், நிதி பற்றாக்குறையால் கட்டுமான பணிகள் நடைபெறாமல் இருந்தது. தற்போது நிதி வந்துள்ள நிலையில் அடுத்த வாரம் பணிகள் துவங்கிவிடும், என்றார்.