கருணாநிதி கொள்கைகளை காற்றில் பறக்க விடும் தி.மு.க., அரசு சி.ஐ.டி.யு., மாநிலத் தலைவர் சாடல்
விருதுநகர்:''அரசு போக்குவரத்துக் கழகங்களை உருவாக்கிய மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கொள்கைகளை தனியார் மயம் மூலம் காற்றில் பறக்க விடுகிறது தற்போதைய தி.மு.க., அரசு,'' என, விருதுநகரில் சி.ஐ.டி.யு., மாநிலத் தலைவர் சவுந்திரராஜன் சாடினார். அவர் கூறியதாவது: அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் 33 வது நாளாக காத்திருப்பு போராட்டத்தை தொடர்கின்றனர். தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை 25 மாதங்கள் கழித்து, ஒன்பதாண்டுகள் கழித்து கேட்கிற போது கொடுக்க முடியாது, அதற்கான வாக்குறுதிகளை தர முடியாது என அரசு கூறுமானால் அது மிகப்பெரிய அநீதி. 24 மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்றவர்கள் முதல் தற்போது வரை ஓய்வு பெறுவோரை வெறுங்கையுடன் அனுப்புகின்றனர். அவர்களின் பணம் ரூ.40 லட்சம் 30 ஆண்டுகளாக சேமித்தது அரசு கையில் உள்ளது. அதை தர மறுக்கின்றனர். இந்த தீபாவளியையாவது ஓய்வு பெற்றவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட அப்பணத்தை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வூதிய பஞ்சப்படி 9 ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பும் வழங்கவில்லை. கடந்த ஆட்சி என்ன செய்ததோ, அதைத் தான் இந்த ஆட்சியும் செய்து வருகிறது. பணியில் உள்ளவர்களுக்கும் நியாயம் வழங்கவில்லை. இறந்து போனவர்களின் வாரிசுகளுக்கு வேலையும் நிலுவையில் உள்ளது. தனியார்மயத்தை நோக்கி செல்வதன் மூலம் கருணாநிதியின் கொள்கைகளை காற்றில் பறக்கவிடுகிறது தற்போதைய தி.மு.க., அரசு. பொதுத்துறை தொடர்ந்தால் மட்டுமே சமூக நீதிப்படி வேலை வழங்கப்படும். இது அனைத்துமே தி.மு.க., தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தது தான். போராட்டத்தை நாங்கள் தொடர்வோம். இது அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும். மத்திய அரசை எதிர்க்கும் விஷயத்திலும், சில சமூக பிரச்சனைகளிலும் மட்டுமே தி.மு.க.,வுடன் உடன்பட்டு இருக்கிறோம். மக்கள், தொழிலாளர்களுக்கு எதிராக செயல்பட்டால் நிச்சயம் எதிர்ப்போம் என்றார்.