தொழில் உரிமம் இல்லாமல் இயங்கும் தொழிற்சாலைகள்
சிவகாசி : சிவகாசியில் உள்ள தொழிற்சாலைகள் பெரும்பான்மையானவைகள் தொழில் உரிமம் (ரன்னிங் லைசென்ஸ்) பெறாமலே இயங்குவதால் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகின்றது. இதனால் வளர்ச்சிப் பணிகளிலும் பாதிப்பு ஏற்படுகின்றது.தொழில் நகரான சிவகாசியில் பட்டாசு, அச்சு, தீப்பெட்டி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள், பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றது. இந்த தொழில் நிறுவனங்களுக்கு தொழில் உரிமம் சான்றிதழ் மிகவும் அவசியம். ஆனால் தொழில் நிறுவனங்களில் பெரும்பான்மையானவை தொழில் உரிமம் பெறாமலேயே நடத்தப்படுகின்றது.இவ்வாறு தொழில் உரிமம் பெறாமல் தொழிற்சாலை இயங்குவது சட்டப்படி குற்றம். முறையாக உள்ளாட்சி நிர்வாகங்களில் அனுமதி பெற்று நடக்காததால் உள்ளாட்சி நிர்வாகத்திற்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகின்றது.இதனால் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதிலும் சிரமம் ஏற்படுகின்றது. உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் தொழிற்சாலைகளுக்கு சென்று கேட்டால் இதோ அதோ என போக்கு காட்டி வருகின்றனர். சில சமயங்களில் அதிகாரிகளுக்கு சம்திங் கொடுப்பதன் மூலம் தொழில்கள் தொடர்ந்து நடந்து வருகின்றது. இதுபோன்று உரிமம் பெறாமல் இயங்கும் தொழில் நிறுவனங்களில் எதிர்பாராத விதமாக ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அரசு சார்பில் கிடைக்கும் எந்த பலனும் கிடைக்க வாய்ப்பில்லை.இது தொழில்களை நடத்துபவர்களுக்கு தெரிந்தும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே தொழிற்சாலைகளுக்கு உடனடியாக தொழில் உரிமம் பதிவு செய்து சான்றிதழ் பெற வேண்டும். உள்ளாட்சி நிர்வாகத்திற்கு வருவாய் கிடைக்க வழி செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.