ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்டை கேட்கும் அரசு மருத்துவமனை
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் ஸ்டாண்ட் அடுத்த சில மாதங்களில் செயல்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், அரசு மருத்துவமனைக்கு கூடுதல் சிறப்பு பிரிவு கட்டடங்கள் கட்டுவதற்கு வசதியாக தற்போது உள்ள பஸ் ஸ்டாண்ட் இடத்தை தங்களுக்கு தருமாறு அரசு மருத்துவமனை நிர்வாகம், கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் பல்வேறு சிறப்பு பிரிவுகள் இயங்குவதால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் வருவதால் கடும் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பல நேரங்களில் பிரசவத்திற்கு வரும் பெண்களுக்கு பெட் வசதி இல்லாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அவர்களுக்கு உதவியாக வரும் பெற்றோரும் தவிக்கின்றனர். இதனால் பிரசவத்திற்கு என தனி கட்டடம் கட்டுவது மிகவும் அவசியமாகிறது. ஆனால் இதற்கு அரசு மருத்துவமனை வளாகத்தில் போதிய இடவசதி இல்லை என மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது.தற்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு அடுத்த சில மாதங்களில் செயல்பாட்டுக்கு வர உள்ள நிலையில், தற்போது பஸ் ஸ்டாண்ட் உள்ள இடத்தை அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்கு வசதியாக இடம் தருமாறு மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் கள ஆய்வு கூட்டத்தில் கோரிக்கை எழுப்பப்பட்டது. அது குறித்து கேள்வி கேட்ட கலெக்டரிடம், கடைகளை இடித்து வணிக வளாகம் கட்ட உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.அப்போது வணிக வளாகத்தை விட மருத்துவமனைக்கு கட்டடம் தான் அவசியம், மக்கள் நலனே முக்கியம் என கலெக்டர் பதிலளித்தார். எனவே புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டுக்கு வந்த பிறகு பழைய பஸ் ஸ்டாண்ட் இடம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்படுமா என்பதை காலம் தான் பதில் சொல்லும்.