டோட்டெக்ஸ் முறையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதால் கள பணியிடங்கள் உருவாகாமல் போகும் அபாயம்
விருதுநகர்:தமிழகத்தில் 'டோட்டெக்ஸ்' முறையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதால் மின் துறையில் கள பணியிடங்கள் உருவாகாமல் போகும் அபாயம் உள்ளது என தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு எச்சரிக்கிறது.தமிழக மின்துறையில்தற்போது 60 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்நிலையில் 'டோட்டெக்ஸ்' முறையில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்த உலகளாவிய டெண்டர்விட்டுள்ளது தமிழக அரசு. 'டோட்டெக்ஸ்' முறை என்றால் ஸ்மார்ட் மீட்டரின் மொத்த பராமரிப்பு, இயக்க முறைகளை எந்த கம்பெனி டெண்டர் எடுக்கிறதோ அவர்களே செய்வர். கேரளா அரசு 'ஜிபேக்ஸ்' எனும் 'கேபிட்டல்' முறையில் அவர்களே கொள்முதல் செய்து, அவர்களது வாரிய பணியாளர்களை வைத்து ஊழியர் பிரச்னை வராது பொருத்துகின்றனர். இதனால் தனியார்மய பிரச்னையும் ஏற்படவே இல்லை. ஆனால் தமிழகத்தில் 7 ஆண்டுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த ஒப்பந்தம் அளிப்பதால் 7 ஆண்டுகளுக்கு களப்பணிகளுக்கு புதிய பணியிடங்கள் இருக்காது. தற்போது சென்னை கோடம்பாக்கம், தீ நகரில் பொருத்தி விட்டனர். ஏற்கனவே தகர மீட்டர், ஸ்டாட்டிங் மீட்டர், எலக்ட்ரானிக் மீட்டர் வரை புதுப்பிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், பல வீடுகளில் எலக்ட்ரானிக் மீட்டர்கள் இன்னும் நல்ல நிலையில் உள்ளன.இது குறித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, மாநில துணை தலைவர் சந்திரன் கூறியதாவது: 2023ல் துவங்க வேண்டிய எங்கள் கோரிக்கைகள் மீதான பேச்சுவார்த்தை தற்போது வரை துவங்கவே இல்லை. அடிப்படை பணியிடங்களான கம்பியாளர், கள உதவியாளர் பணியிடங்களே 30 ஆயிரம் காலியாக உள்ளது. கடும் மன உளைச்சலில் பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.டோட்டெக்ஸ் முறையில் காலை ஒரு மின்கட்டணமும், 'பீக் அவரில்' மாலை 6 - 9 மணிக்கு ஒரு மின்கட்டணமும் நிர்ணயிப்பர். இதன் மூலம் மறைமுகமாக கட்டணம் உயரும். வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களின் வாழ்க்கை கானல் நீராக தான் மாறும். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தினால் கணக்கீட்டு பணியாளர்கள் தேவையில்லை. தற்போதுள்ள 7800 கணக்கீட்டாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டாலும், பணியிடங்கள் குறைக்கப்படுவது வேதனைக்குரியது. இந்த 'டோட்டெக்ஸ்' முறையை கைவிட வேண்டும். இதற்கு இவ்வளவு பணம் செலவளிப்பதற்கு பதில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுத்து மின் வாரியத்தை பலப்படுத்தலாம் என்றார்.