டிராபிக் சிக்னல் இல்லாததால் போக்குவரத்தில் பாதிப்பு விபத்திற்கும் வழி
சிவகாசி: சிவகாசி வேலாயுத ரஸ்தா ரோடு விலக்கில் டிராபிக் சிக்னல் இல்லாததால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுவதோடு விபத்திற்கும் வழி ஏற்படுகிறது.சிவகாசி நகரின் நுழைவுப் பகுதியில் வேலாயுத ரஸ்தா ரோடு விலக்கு உள்ளது. இங்கிருந்து சிவகாசி நகர், அரசு மருத்துவமனை, திருத்தங்கல் ரோடு பிரிந்து செல்கின்றது. நகரின் நுழைவுப் பகுதி என்பதால் அனைத்து வாகனங்களும் இதனை கடந்து தான் செல்ல வேண்டும். தற்போது சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வருகின்றது. இதனால் அனைத்து வாகனங்களுமே வேலாயுத ரஸ்தா ரோட்டில் தான் வந்து செல்கின்றது.அரசு மருத்துவமனை, ரயில்வே ஸ்டேஷன், மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் இருப்பதால் எப்பொழுதுமே இந்த ரோட்டில் போக்குவரத்து நிறைந்திருக்கும். அனைத்து பள்ளி கல்லுாரி மாணவர்களும் இந்த ரோட்டில் தான் வந்து செல்கின்றனர். இந்நிலையில் வேலாயுதா ரஸ்தா ரோடு விலக்கில் டிராபிக் சிக்னல்கள் இல்லை.இதனால் அடிக்கடி இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது. மேலும் சைக்கிள், டூவீலரில் வருபவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே இப்பகுதியில் டிராபிக் சிக்னல்கள் அமைத்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.