| ADDED : மார் 09, 2024 08:41 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : மதுரை மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மகாசிவராத்திரி, பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.நேற்று காலை 6:00 மணி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். காலை 9:00 மணி வரை இதமான சூழல் இருந்த நிலையில் நேரம் செல்ல, செல்ல வெயிலின் தாக்கம் அதிகரித்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்ததால் மதியம் 12:00 மணியை கடந்தும் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை ஏறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.கோயிலில் மாலை 4:30 மணிக்கு மேல் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி, சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு பூஜைகளை கோயில் பூஜாரிகள் செய்தனர்.இரவு 7:00 மணி முதல் மகா சிவராத்திரி வழிபாடு துவங்கியது. இரவு 8:00மணி, அதிகாலை 12:00 மணி, அதிகாலை 2:00 மணி, அதிகாலை 5:00 மணி வரை நான்கு கால சிவராத்திரி பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.வத்திராயிருப்பு, சாப்டூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தாணிப்பாறையிலிருந்து மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் உட்பட பல்வேறு நகரகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.