உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சென்னை இயக்குனரகத்தில் நவ.24 முதல் காலவரையற்ற போராட்டம் ஊராட்சி செயலர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை இயக்குனரகத்தில் நவ.24 முதல் காலவரையற்ற போராட்டம் ஊராட்சி செயலர்கள் சங்கம் அறிவிப்பு

பெருநாழி:துாய்மை காவலர்களின் மாத ஊதியத்தை ரூ.10,000 ஆக உயர்த்துதல் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அக்., 29ல் தற்செயல் விடுப்பு, நவ., 24 முதல் வேலை நிறுத்தம் மற்றும் சென்னை உள்ளாட்சிகள் துறை இயக்குனரகத்தில் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என பெருநாழியில் தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்க மாநிலத் தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் தெரிவித்தார். அவர் கூறியதாவது: துாய்மைக் காவலரின் மாத ஊதியத்தை ரூ.10,000 ஆக உயர்த்தி ஊராட்சி நிர்வாகங்கள் மூலம் வழங்க வேண்டும். 2009 ஜூன் முதல் அரசாணைப்படி மக்கள் நல பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு கால முறை ஊதியத்தை கால முறை ஊதியமாக நிர்ணயித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி இயக்குபவர்களின் பணி காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு காலமுறை ஊதியம் ரூ. 15,000 வழங்க வேண்டும். ஊராட்சி செயலர்களை மாநில அரசின் ஓய்வூதியத்திட்டத்தில் இணைத்து ஒன்றிய பதிவறை எழுத்தருக்கு பொருந்தும் அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் பத்தாண்டுகளாக பணிபுரியும் கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய அரசாணை வெளியிட்டும் இன்னும் நிரந்தரம் செய்யப்படவில்லை. பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இதுபோன்ற 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அக்., 29ல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம், மாவட்ட தலைமை இடங்களில் மறியல் நடத்தப்படும். நவ., 24 முதல் சென்னை இயக்குனரகத்தில் தொடர் வேலை நிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை