பரமக்குடி பள்ளி மாணவி பலாத்கார வழக்கு ஸ்ரீவி., நீதிமன்றத்தில் அ.தி.மு.க., பிரமுகர் சரண்
ஸ்ரீவில்லிபுத்தூர்:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பள்ளி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதாகி, ஜாமின் ரத்து செய்யப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர் சிகாமணி 46, உச்ச நீதிமன்ற உத்தரவின் படி ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை அக். 25 வரை காவலில் வைக்க நீதிபதி சுதாகர் உத்தரவிட்டார்.பரமக்குடியில் 9ம் வகுப்பு மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அப்பகுதி அ.தி.மு.க. பிரமுகர் சிகாமணி 46, புதுமலர் பிரபாகர், ராஜா முகமது, அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகியோரை பரமக்குடி போலீசார் கைது செய்தனர்.பின்னர் இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசிற்கு மாற்றப்பட்ட நிலையில், மகிளா நீதிமன்றம் சிகாமணிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது. இதனை ரத்து செய்ய கோரி சி.பி.சி.ஐ.டி. போலீசார் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்த நிலையில், சிகாமணியின் ஜாமின் ரத்து செய்யப்பட்டது.இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிகாமணி மேல்முறையீடு செய்தார். இதில் மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு சரி தான் என்றும், 3 வாரத்திற்குள் சிகாமணி ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் சரணடையவும், வழக்கை 5 மாதத்தில் முடிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில் இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கு ஆவணங்களும் கொண்டுவரப்பட்டன.இதனிடையே சிகாமணி நேற்று காலை, ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை அக். 25 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து சிகாமணியை போலீசார் விருதுநகர் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.