உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / படுமோசமான ரோட்டால் குருலிங்கபுரத்தில் மக்கள் அவதி

படுமோசமான ரோட்டால் குருலிங்கபுரத்தில் மக்கள் அவதி

சாத்துார் : துார்ந்து போன வாறுகால், குண்டும் குழியுமான படுமோசமான ரோட்டால் குருலிங்கபுரத்தில் மக்கள் அவதிப்படுகின்றனர்.பாதாள சாக்கடை திட்டத்திற்காகவும் புதிய தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டதற்காகவும் தெருக்கள் தோண்டப்பட்டதால் ரோடு முழுவதும் குண்டும்குழியுமாக உள்ளது. பள்ளம் மேடு காரணமாக பாதசாரிகளும் முதியவர்களும் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். நகரில் உள்ள தெருக்களில் வாறுகால் கட்டப்பட்டு பல வருடங்களாவதால் வாறுகாலில் கற்கள் சிதைந்து துார்ந்து போய் உள்ளன துப்புரவு பணியாளர்கள் குப்பையை ரோட்டில் போட்டு செல்கின்றனர். இவை மீண்டும்வாறுகாலில் விழுந்து அடைப்பு ஏற்படுகிறது.குடிநீர் மிகவும் கலங்கலாக வருகிறது. முதல் 10 நிமிடம் கலங்கலாக வரும் குடிநீரை பிடித்து பயன்படுத்த முடியாததால் வீணாகிறது. வேறு வழியின்றி மக்கள் வண்டிகளில் விற்பனை செய்யப்படும் மினரல் வாட்டரை குடம் ரூ.10 கொடுத்து விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.தெரு விளக்குகள் அடிக்கடி பழுதாகி விடுவதால் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. நகரில் குப்பை தொட்டி வசதியில்லை. திறந்த வெளியில் குப்பையை கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

ரோடு வாறுகால் தேவை

சேகர், வியாபாரி: பாதாள சாக்கடைத் திட்டம் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. நகரில் அனைத்து தெருக்களிலும் ரோடு, வாறுகால் வசதியுள்ளது. அது போல் குருலிங்கபுரத்திலும் பேவர் ப்ளாக்ரோடு, வாறுகாய் வசதி செய்து தர வேண்டும்.

சுகாதார வளாகம் தேவை

சக்தி, குடும்பத் தலைவர்: ஆண்கள், பெண்கள் பயன் படுத்த போதுமான சுகாதார வளாகம் இல்லை. ஒரு பொது சுகாதார வளாகம் மட்டுமே உள்ளது. ஆண்கள், பெண்கள் வைப்பற்றின் கரையை திறந்த வெளிக் கழிப்பறையாக பயன்படுத்தி வருகிறார்கள். புதிய சுகாதார வளாகம் கட்ட வேண்டும்.

நுாலகம் தேவை

செல்வராஜ், தனியர் நிறுவன ஊழியர்: குருலிங்கபுரத்தில் படித்த இளைஞர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பலர் உள்ளனர். இந்தப் பகுதியில் கிளை நுாலகம் அமைந்தால் இளைஞர்கள்போட்டித் தேர்வுக்கு படிக்க வசதியாக இருக்கும்.முதியவர்களும் நுால்கள் படித்து பயன்அடைவார்கள் கிளை நுாலகம் கட்டித் திறக்க வேண்டும்.

பயணிகள் நிழற்குடை தேவை

சோமு, குடும்பத் தலைவர்: பயணிகள்நிழற்குடை கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் கூரை உள்ளது. இதனை இடித்து அகற்றி விட்டு புதிய பயணிகள் நிழற்குடை கட்டித் தர வேண்டும். நகரில் உள்ள ஓடையில் முள்செடி புதர் போல் வளர்ந்துள்ளது. இதனை சுத்தம் செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை