படிக்கட்டில் தவறி விழுந்த பயணி; பஸ்சை ஓட்டிச்சென்ற போலீஸ்
விருதுநகர்: விருதுநகர் நோக்கி வந்த தனியார் பஸ்சின் படிக்கட்டில் இருந்து பெண் ஒருவர் தவறி விழுந்தார். டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டு தப்பித்து ஓடியதால் போலீசார் பஸ்சை ஓட்டி சென்றனர். அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் நோக்கி 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை 9:30 மணிக்கு தனியார் பஸ் வந்தது. இதில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் உணவகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர் முன்புறம் உள்ள படிக்கட்டில் பயணித்தார். ஆர்.எஸ்., நகர் அருகே வந்த போது ரோட்டை ஒருவர் கடந்ததால் பஸ்சை டிரைவர் திடீரென பிரேக் அடித்து நிறுத்தினார். இதனால் படிக்கட்டில் நின்ற பெண் பயணி கீழே விழுந்து காயமடைந்தார். இவர் இறந்து விட்டதாக கருதிய டிரைவர் பஸ்சை அப்படியே நிறுத்தி விட்டு தப்பிச்சென்றார். இதையடுத்து கிழக்கு போலீசார் காயமடைந்த பயணியை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் போலீசார், தனியார் பஸ்சை புது பஸ் ஸ்டாண்டிற்கு ஓட்டி சென்று பயணிகளை இறக்கி விட்டனர்.