உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வடிகால் இல்லை, தாழ்வாக செல்லும் மின்வயர்கள் அவதியில் விருதுநகர் வீராச்சாமி தெரு மக்கள்

வடிகால் இல்லை, தாழ்வாக செல்லும் மின்வயர்கள் அவதியில் விருதுநகர் வீராச்சாமி தெரு மக்கள்

விருதுநகர்: ரயில்வே தண்டவாளத்திற்கு பாதுகாப்பு சுவர் இல்லை, குடியிருப்பு பகுதியில் தாழ்வாக செல்லும் மின்வயர்கள், மழை நீர் செல்ல வடிகால் இல்லை என பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் விருதுநகர் 4வது வார்டு வீராச்சாமி தெரு மக்கள்.விருதுநகர் நகராட்சியின் 4வது வார்டில் வீராச்சாமி தெரு, ராமமூர்த்தி ரோடு மேம்பாலம், சர்வீஸ் ரோடு பகுதிகள் உள்பட பல பகுதிகள் உள்ளது. இங்குள்ள மேம்பாலத்தில் மழைக்காலத்தில் தேங்கும் தண்ணீர் வடிந்து செல்வதற்காக குழாய் அமைக்கப்பட்டது. ஆனால் குழாய்கள் முறையாக பராமரிக்கப்படாததால் முழுவதும் சேதமாகியுள்ளது.இவற்றில் பல குழாய்கள் முற்றிலும் சேதமாகி இருப்பதால் மழையின் போது வழிந்து செல்லும் தண்ணீர், சர்வீஸ் ரோடுகளில் செல்பவர்கள் மீது விழுகின்றன. மேலும் வீராச்சாமி தெருவில் குடியிருப்புகளுக்கு மத்தியில் செல்லும் மின்வயர்கள் தாழ்வாக செல்வதால் லோடு வாகனங்கள் எளிதில் தீப்பிடிக்கும் வாய்ப்பு உள்ளது.இப்பகுதி வழியாக செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவர்கள் சேதமாகி இடிந்து விழுந்து பல ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை புதிதாக தடுப்புச்சுவர்கள் அமைக்கப்படாததால் குடியிருப்பு வாசிகள் தற்காலிக தடுப்புச்சுவர்கள் அமைத்துள்ளனர். மேலும் மழை நீர் வடிந்து செல்ல வடிகால் வசதி இல்லாததால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி மக்கள் அவதிப்படுகின்றனர்.

மின்வயர்களால் அபாயம்

விஜயபாஸ்கரன், நகைக்கடை தொழில்: விருதுநகர் வீராச்சாமி தெருவில் குடியிருப்புகளுக்கு அருகே தாழ்வாக மின்வயர்கள் செல்கின்றன. இதனால் லோடு வாகனங்கள் வந்து செல்வதில் சிரமம் உள்ளது. இந்த மின்வயர்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடுப்புச்சுவர் வேண்டும்

வாசிம் அக்ரம், ஆட்டோ டிரைவர்: விருதுநகர் வீராச்சாமி தெரு அருகே செல்லும் ரயில்வே தண்டவாளத்திற்கு தடுப்புச்சுவர்கள் இல்லை. இந்த தண்டவாளத்திற்கு கீழ் பகுதியில் கட்டப்பட்டுள்ளதை போல மேல் பகுதியிலும் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்.

மின்கம்பம் சேதம்

மணிமாறன், சுயதொழில்: குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்பட்ட மின்கம்பங்கள் சேதமான நிலையில் உள்ளது. தாழ்வாக செல்லும் மின்வயர்களால் தெருக்களில் லோடு ஏற்றி வரும் வாகனங்கள் உராய்வு ஏற்பட்டு தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை